பொரி வியாபாரி வீட்டில் தீ விபத்து

சேந்தமங்கலம், மார்ச் 20: சேந்தமங்கலம் அருகே பொரி வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(30). இவர் பொரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா(25). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம், குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். சித்தேஸ்வரன், பிரியா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு பொரி வியாபாரம் செய்ய நாமக்கல்லுக்கு சென்று விட்டனர். மதியம் வீட்டிற்குள் இருந்து கரும்பு புகை வெளியேறி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து சித்தேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின் கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பீரோவில் வைத்திருந்த ரூ.7 லட்சம் ரொக்கம், அரிசி மூட்டைகள், துணிகள், மளிகை பொருட்கள், வீட்டின் மேல் கூரை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: