மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் 291 தொகுதிகளில் திரிணாமுல் வேட்பாளர்கள் அறிவிப்பு: பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டி

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. முதல்வர் மம்தா பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 154 தொகுதிகளுக்கு ஏப்.23ஆம் தேதியும், மீதம் உள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. மே 4 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

நேற்று முன்தினம் 144 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ முதல் பட்டியல் வெளியான நிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. மீதம் உள்ள மூன்று தொகுதிகளில், அனித் தாபா தலைமையிலான ‘பாரதிய கோர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா’ கட்சி போட்டியிடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்த பட்டியலில் முதல்வர் மம்தா , பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதியில் அவருக்கும் பாஜவின் சுவேந்து அதிகாரிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் பற்றி முதல்வர் மம்தா கூறுகையில்,’ இந்தத் தேர்தலில் பாஜவின் எண்ணிக்கை குறையும். அவர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு அவர்களுக்குத் தகுந்த பதிலடி கிடைக்கும். திரிணாமுல் காங்கிரஸ் அமோகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும். நாங்கள் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’ என்றார்.

* நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக நெருங்கிய நண்பர்
நந்திகிராம் தொகுதியில் கடந்த 2021ல் நடந்த தேர்தலில் பா.ஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் முதல்வர் மம்தா 1900 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறையும் பவானிபூர், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட திரிணாமுல் பட்டியலில் நந்திகிராம் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக சுவேந்து அதிகாரியுடன் நெருங்கிய நண்பரும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நந்திகிராம்-2 வட்டாரத்தில் உள்ள ‘போயல்-1’ கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான பவித்ரா கர் நிறுத்தப்பட்டுள்ளார்.

* 5 மாநிலங்களில் 1,100 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்.9, ஏப்.23 ஏப்.29ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் 1100 தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நாளைக்குள் பணியில் சேர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

* மேற்கு வங்கத்தில் மேலும் 19 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
மேற்குவங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, டிஜிபி பியூஷ் பாண்டே மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் சுப்ரதிம் சர்க்கார் ஆகியோரையும் மாற்றியது. தற்போது மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஏடிஜிபிக்களும் இந்த மாற்றத்தில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் சிங், தென் வங்கத்தின் புதிய கூடுதல் தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டார். அதே போல் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மேற்குவங்க கேடர் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. ஜெயராமன் வட வங்கத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற துளிகள்
* 2033ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதார காப்பீடு
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணை கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘காப்பீட்டுத் துறை விரிவடைந்து வருகின்றது. 2024-2025ம் நிதியாண்டில் இந்த துறையானது நாட்டின் 58கோடி மக்களின் உயிர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கியுள்ளது. சுகாதாரக் காப்பீடு இந்த அரசின் முன்னுரிமையாகும். 2033ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’என்றார்.

* எடை குறைப்பு சிகிக்சை மருந்துகளுக்கு ஒப்புதல்
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பரியா படேல் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில், ‘‘நாட்டின் மருந்து ஒழுங்கு முறை அமைப்பான சிடிஎஸ்சிஓ நாட்டில் எடை குறைப்பு சிகிச்சைக்காக மூன்று மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரிலிஸ்டட், டிரிசிபேடைட்,செமாகுளுடைட் ஆகிய மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சில்லறை விற்பனையில் விற்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

* 3 ஆண்டுகளில் 5.13 லட்சம் உணவு மாதிரிகள் ஆய்வு
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்து மூலமாக அளித்த பதிலில், அதிக ஆபத்து கொண்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து உணவு வகைகளும் ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் கடந்த 2022 -2023 முதல் 2024-2025 வரையிலான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மொத்த எண்ணிக்கை 56,259ஆகும். இதே காலகட்டத்தில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் எப்எஸ்எஸ்ஏஐ மண்டல அலுவலகங்கள் மூலம் 5.18 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்” என்றார்.

* ஜன் விஸ்வாஸ் மசோதா வாபஸ்
நம்பிக்கை சார்ந்த நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சில சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களை குற்றமற்றவையாக்கவும், அவற்றை முறைப்படுத்தவும் கோரும் ஜன் விஸ்வாஸ்(விதிமுறைகள் திருத்த) மசோதாவை மக்களவையில் ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் திரும்ப பெற்றார். மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய பின் இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: