அரியானா மாநிலங்களவை தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜ, காங்கிரஸ் வெற்றி: 5 காங். எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தனர்

சண்டிகர்: அரியானா மாநிலங்களவை தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜ, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. இதில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுயேச்சை வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 26 பேர் போட்டியின்றி தேர்வாகினர். பீகார், அரியானா, ஒடிசாவில் போட்டி ஏற்பட்டதால் அங்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

இதில் பீகாரில் 5 இடங்களையும் பாஜ கூட்டணி வென்றது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரும் ராஷ்டிரிய ஜனதா எம்எல்ஏ ஒருவரும் வாக்களிக்க வராததால் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஒடிசாவில் 4 இடங்களில் பாஜ 2, பிஜூ ஜனதா தளம் 1 இடத்தையும் கைப்பற்றின. 8 பிஜேடி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜ ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே வெற்றி பெற்றார். அரியானாவில் 2 இடங்களுக்கான தேர்தலில் பாஜ சார்பில் சஞ்சய் பாட்டியாவும், காங்கிரஸ் சார்பில் கரம்வீர் சிங் பவுத்தும் போட்டியிட்டனர்.

வாக்கு ரகசியம் மீறப்பட்டதாக இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரால் காங்கிரஸ் எம்எல்ஏ பரம்வீர் சிங் அளித்த வாக்கு செல்லததாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 90 எம்எல்ஏக்களில் இந்திய தேசிய லோக் தளத்தின் 2 எம்எல்ஏக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் 88 பேர் வாக்களித்த நிலையில் 5 ஓட்டுகள் (காங். 4, பாஜ 1) செல்லாததாக அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் எம்எல்ஏ பவுத் எளிதாக வெல்வதற்கான எம்எல்ஏக்கள் இருந்தும் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தலுக்கு வாக்களித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு தாண்டியும் வாக்கு எண்ணிக்கை நீடித்தது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு 39 வாக்குகளுடன் பாஜவின் பாட்டியாவும், 28 வாக்குகளுடன் காங்கிரசின் பவுத்தும் வெற்றி பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் நந்தல் 16 வாக்குகள் பெற்றிருந்தார். மாநிலங்களவை தேர்தலுக்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, இன்னும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ கட்சி மாறி ஓட்டு போட்டியிருந்தாலும் நந்தல் வெற்றி பெற்றிருப்பார். இதைத் தொடர்ந்து கட்சி மாறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக அக்கட்சியின் அரியானா மாநில பொறுப்பாளர் பி.கே.ஹரிபிரசாத் கூறி உள்ளார்.

* 3 எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்
ஒடிசாவில் கட்சி மாறி வாக்களித்த ரமேஷ் சந்திரா ஜெனா (சனாகேமுண்டி தொகுதி), தசரதி கோமாங்கோ (மோகனா), சோபியா பிர்தோயஸ் (பாராமதி-கட்டாக்) ஆகிய 3 எம்எல்ஏக்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் செய்த துரோகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநில காங்கிரசின் சமூக ஊடக பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: