புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதேப்போன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் நசுங்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் ஜனவரி 15,18, 19ம் தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 15ம்தேதி விஜய்யை டெல்லி வரவழைத்து சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதால் செந்தில்பாலாஜி எம்எல்ஏ டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ‘‘கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியானது தொடர்பாக தவெக தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையின் போது நீங்கள் தான் இந்த விவகாரத்தில் சதி செயலை செய்ததாகவும், அதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட இறந்தனர். குறிப்பாக 41பேர் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்கள். இதற்கு உங்களது பதில் என்ன என்று செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில்,‘‘தவெக கட்சிக்கு பிரசார நேரம் என்பது பிற்பகல் தான் வழங்கப்பட்டது. ஆனால் இரவு தான் சம்பவ இடத்திற்கு விஜய் வந்தார். இதனால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
காவல்துறையும் இதனை கட்டுப்படுத்திக் கொண்டு தான் இருந்தார்கள். குறிப்பாக விஜய் தனது கட்சியின் உறுப்பினர்களை கட்டுப்படுத்த தவறி விட்டார். அதுவும் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக கூட்ட நேரிசலில் பலர் சிக்கி, மயக்கம் அடைந்து கீழே விழுந்து கொண்டிருந்த நேரத்தில் தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் சம்பவ இடத்தில் இருந்து விஜய் அவசர அவசரமாக புறப்பட்டு சென்று விட்டார். அந்த இடத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆம்புலன்ஸ் வரவழைப்பது முதல், மருத்துவர்களிடம் சிகிச்சையை துரிதப்படுத்துவது வரையில் அனைத்தும் நான் செய்தேன்.
இதனை கூட்டத்திற்கு வந்தவர்கள் கண்கூடாக நேரில் பார்த்தார்கள். சம்பந்தப்பட்ட நபர் பிரச்சனை என்று தெரிவித்த உடன் ஓடோடிவிட்டார். ஆனால் உதவி செய்தவர்கள் குற்றவாளி என்றால் எப்படி ஏற்க முடியும். குறிப்பாக கரூரில் பிரசார கூட்டம் நடத்தியது தவெக தலைவர் விஜய், அவரை பார்க்க தான் கூட்டம் அதிகப்படியாக கூடியது, குறிப்பிட்ட நேரத்தில் அதாவது காவல்துறை அனுமதித்த நேரத்தில் வராமல் விஜய் சாவகாசமாக மிகவும் காலதாமதமாக வந்தார். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41பேர் பரிதாபமாக பலியாகினர். ஆனால் இதனையெல்லாம் முழுமையாக மறைத்து விட்டு, எனக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததை எப்படி ஏற்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் தவெகவினர் என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறியதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்பினார்.
