செங்கல்பட்டு, மார்ச் 18: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெலன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தாம்பரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தாம்பரம் மாநகராட்சி, கன்னடபாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி, சானிடோரியம் மேம்பாலம் அருகில் மற்றும் பல்லாவரம், ரேடியல் சாலை ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தாம்பரம் மாநகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணிகளையும், விளம்பரங்கள் அகற்றிடும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், சோளிங்கநல்லூர் தொகுதி, துரைப்பாக்கம் எம்.என்.ஜெயின் பொறியியல் கல்லூரியில் தேர்தல் தொடர்பான பொருட்களை பகிர்ந்தளிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், பல்லாவரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க்யூரி, வருவாய் கோட்டாட்சியர் முரளி, வட்டாட்சியர்கள் நடராஜன் உடன் இருந்தனர்.
