செங்கல்பட்டு, மார்ச் 13: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத்தொகையை ரூ.25,000ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் /ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் /சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலங்களில் இன்றைக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
