மாமல்லபுரம், மார்ச் 11: மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் செல்லும் சாலையை ஆக்கிரமித்து பைக்குகள் நிறுத்தப்படுவதால் நோயாளிகள் அவதியடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாமல்லபுரம் அடுத்த, பூஞ்சேரியில் கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகே அரசு மருத்துவமனையும், அரசினர் மேல்நிலைப் பள்ளியும் எதிர் எதிரே அமைந்துள்ளது. இங்கு, மாமல்லபுரம் பூஞ்சேரி, தேவனேரி, வெண்புருஷம், பட்டிப்புலம், நெம்மேலி, வடநெம்மேலி, பையனூர், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றாள், காரணை, நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 30க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்குபவர்களை மீட்டு, பூஞ்சேரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு, சென்னைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு துறை வாகனம், நோயாளிகளை அழைத்து வரும் வாகனம், பள்ளி மாணவர்கள் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடி இருளர் மக்கள் செல்லாத வகையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு மருத்துவமனைக்கு குறித்த நேரத்திற்கு அழைத்துச் செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனம் 3 கி.மீ தூரம் செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. மேலும், தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையும் உள்ளது. வாகன நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களும், அங்கு குறுகிய சாலையில் செல்ல அச்சமடைந்து, தனியார் மருத்துவமனைக்கு சென்று பணம் கொடுத்து சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் மற்றும் நோயாளிகளின் வாகனங்கள் சிரமமின்றி செல்லவும், சாலையை மறித்து நிறுத்தப்படும் பைக்குளை போலீஸ் உதவியோடு அப்புறபடுத்தி, நோ பார்க்கிங் என பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
