‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்…’ சுயேச்சையாக களமிறங்கும் ராமதாஸ்?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக அணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி, கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் வண்டி வந்துச்சு… வண்டி வந்துச்சுன்னு… குழந்தைகளை ஏமாற்றுவதுபோல் ஆதரவாளர்களை ஏமாற்றி வருகிறார். இந்த சூழலில், புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா, ராமதாசை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தவெகவுடன் இணைந்து தனி அணியாக பயணிப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த கதவும் மூடப்பட்டது. இதனால் அடுத்தகட்ட நகர்வு குறித்து ராமதாஸ் தனது ஆதரவு மூத்த நிர்வாகிகளிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா, புதிய கட்சி தொடங்கி விட்ட நிலையில், அதேபோல்தான் ராமதாசின் தற்போதைய நிலையும் உள்ளதாக அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கனவே அய்யா பாமக எனும் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பத்திருந்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் முடிவை சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கு கட்சியை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையிட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பாமக மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரிய வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலுக்கு பிறகே வழக்கில் தீர்வு கிடைக்கும் சூழல் உருவாகி இருப்பதால் ராமதாசின் அரசியல் தொடர் பயணத்துக்கே மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாம்பழம் சின்னம் தற்போதைக்கு கிடைக்காது என்பதால் தனது ஆதரவு நிர்வாகிகளை சுயேச்சைகளாக களமிறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ராமதாஸ். அதேவேளையில் தனியாக போட்டியிட்டு டெபாசிட்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டால், தனது அரசியல் கவுரவத்தை நிலைநாட்ட முடியாமல் போய்விடும் என்று கடும் மனஉளைச்சலில் ராமதாஸ் உள்ளார். இதுகுறித்து அவரது ஆதரவாளர் கூறுகையில், ‘பாமக கட்சி உருவாக்கிய பிறகு 1991ல் இருந்து தேர்தல் என வந்தாலே தைலாபுரத்தில் கூட்டம் அலைமோதும். மகன் தனியாக கட்சியை உடைத்து சென்றுவிட்டார். இதனால் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின் கூட்டணி கதவுகள் திறக்கவில்லை. ஆளுமை நிறைந்த தலைவராக இருந்த ராமதாஸ், தற்போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வருகிறார். எப்படி இருந்தவர், இப்படி ஆகிவிட்டாரே என பாட்டாளி சொந்தங்கள் அவரை நினைத்து வருத்தப்பட்டு வருகின்றனர். காலச்சக்கரம் மாறி வருமா? அவருக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா என்பதற்கு காலம் தான் பதில் அளிக்கும். ஒருவேளை யாருடனும் கூட்டணி இல்லையென்றால் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் சுயேச்சையாக களமிறங்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளார்.

Related Stories: