சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பெங்களூரு புகழேந்தி நேற்று நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். வரும் தேர்தலோடு எடப்பாடியின் கதை முடிந்து விடும் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார். அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் பெங்களூரு வ.புகழேந்தி. சமீபத்தில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதையடுத்து புகழேந்தி, புரட்சி அதிமுக என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். இந்த நிலையில் புகழேந்தி நேற்று திடீரென சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: புரட்சி அதிமுக என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளேன். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன். திமுக கூட்டணி ஆதரித்து, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். என்னுடைய கொள்கை மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பு தான், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை தான் சரியானது. ஜெயலலிதா பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என கூறி வந்தார், ஆனால் தற்போது பாஜவுக்கு அடிமைகளாக பழனிசாமியும், மற்றவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது.
பழனிசாமியுடன் சேர்ந்தால் ஒருவர் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். தற்போது எத்தனை முறை வேண்டுமானாலும் சிறைக்கு செல்வேன் என்கிறார். இவர்கள் எந்த முகத்தை வைத்து தற்போது ஆதரவு தருகிறார்கள் என்று தெரியவில்லை. பழனிசாமி தலைமை தொடர்வதால் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது. எடப்பாடியிலும் தோல்வி தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் திமுக ஆட்சி வெற்றிகரமாக நடக்க போகிறது. பழனிசாமி யாருடனும் ஒத்துப்போகாதது தான் இதற்கு காரணம். 2026 தேர்தலோடு பழனிசாமியின் கதை முடிந்தது.
அதிமுக என்ன ஆகும் என தெரியாது. அதனால் தான் புதிய இயக்கம் தொடங்கியுள்ளேன். போயஸ் கார்டனில் தேசிய கட்சிகள் காத்திருந்த காலம் மாறி தற்போது டெல்லியில் பழனிசாமி தவம் கிடக்கிறார். சிறையில் இருந்து வந்து 9 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் சசிகலா தாமதாக கட்சி தொடங்கியுள்ளார். இனி களத்தில் அவர் பணியாற்ற வேண்டும். மீண்டும் அமைதியாகி விட கூடாது. அதிமுக தொண்டர்கள் பாஜவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீட்டுக்காக பழனிசாமி பணம் கேட்கிறார். நாடு முழுவதும் மதவாதத்துக்கு எதிராக என்னுடைய பிரசாரம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
