சங்கரா கல்லூரி நேர்முக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம், மார்ச் 10: காஞ்சி சங்கரா கல்லூரியில் நடைபெற்ற நேர்முக தேர்வில், தேர்வான 27 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையினை, கல்லூரி முதல்வர் கலை இராம.வெங்கடேசன் வழங்கினார். காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொடர் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன், ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஏஸ் பின்ஸ்டெக் ஏசிஇ பைன் டெக் என்ற நிறுவனம் தங்களின் நிறுவனத்திற்கு தேவையான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நேர்முக தேர்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தேர்வு செய்யப்பட்ட 27 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் கலை இராம.வெங்கடேசன் வழங்கி கூறுகையில், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு முகாம்கள், திறன் கல்வி ஆகியவை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த, வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் திறமைகளை வளர்த்துகொண்டு முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் ஏஸ் பின்ஸ்டெக் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி ஹரி, கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வேலைவாய்ப்பு அலுவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: