குன்னூர், மார்ச் 12: குன்னூர் மலைப்பாதையில் காட்டேரி பேருந்து நிலையத்தில் தீ வைத்து ரகளையில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்குள் நேற்று காலை நுழைந்த ஒருவர் திடீரென அங்கு நெருப்பு வைத்துள்ளார். இதனால் அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, அவர் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிப்பும் உருவானது.
வாகன ஓட்டிகள் அந்த நபரை அகற்ற முயன்றும், அவரது ஆக்ரோஷமான செயலால் பின் வாங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் குன்னூர் நகரமன்ற உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நிலைமையை கையாண்டனர். அவர்கள் அந்த நபரிடம் பொறுமையாக பேசி, அவரை சாலையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். விசாரித்தபோது அவர் பாரதிநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பேருந்தில் ஏற்றி அவரது சொந்த ஊருக்குப் அனுப்பி வைத்தனர்.
