×

2024-2025ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை: அமைச்சர் சாமிநாதன் நிதியொப்பளிப்பு அரசாணை வெளியிட்டார்

 

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகாறும் 1534 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஆண்டிற்கு ரூ.6 கோடியே 98 லட்சம் தொடர் செலவினமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / கைம்பெண் மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

அதன்படி 2024-2025ம் நிதியாண்டிற்கு சென்னை மாவட்டத்தில் 9 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5, காஞ்சிபுரம்-5, வேலூர்-3, திருவண்ணாமலை-7, விழுப்புரம்-2, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், தருமபுரி-3, நாமக்கல்- 2, கோயம்புத்தூர்- 3, திருப்பூர்-2, நீலகிரி- 6, திருச்சி-4, புதுக்கோட்டை-3, சிவகங்கை-2, தஞ்சாவூர்-3, நாகப்பட்டினம்-3, மதுரை-3, தேனி- 4, விருதுநகர்- 2, திருநெல்வேலி- 2, கன்னியாகுமரி-2, திருப்பத்தூர்-2, செங்கல்பட்டு-2, ராணிப்பேட்டை-2, கள்ளக்குறிச்சி-3, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 34 மாவட்டங்களிலும் 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் வழங்கி விழாப் பேருரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Minister ,Saminathan ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Development Department ,
× RELATED தமிழ்நாட்டில் ரூ.5,650 கோடி மதிப்புள்ள...