திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 5 புதிய ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார். அதேபோல் என்டிஏ பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்திலும், பின்னர் புதுச்சேரி மற்றும் மதுரையிலும் பிரசாரம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக 3வது முறையாக பிரதமர் மோடி இன்று (11ம் தேதி) தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் விழா நடை பெறும் இடமான பஞ்சப்பூருக்கு செல்கிறார்.
அதே பகுதியில் முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒன்றிய அரசின் விழா நடைபெறுகிறது. இதில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு 6.72 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையை மோடி அர்ப்பணிக்கிறார். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் திறந்து வைக்கிறார். பெட்ரோலிய துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ‘என்ஹெச் 81’ கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் நாகர்கோவில்-சர்லாபள்ளி, போத்தனூர் (கோவை) தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், ராமேஸ்வரம்-மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், நெல்லை-மங்களூரு விரைவு ரயில், மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி, விவசாய துறை அமைச்சர் ஷிவ்ராஜ்சிங் சவுஹான், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி, ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா, மற்றும் இணை அமைச்சர்கள் சந்திரசேகர் பெம்மாசானி, சுரேஷ்கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, கமலேஷ் பாஸ்வான், ரவ்நீத் சிங், ஹர்ஷ் மல்கோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழா முடிந்ததும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகிறார்.
அந்த மேடையில் என்டிஏ பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி எடமலைப்பட்டி புதூர் வழியாக காரில் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
