நன்றி குங்குமம் டாக்டர்
சிலருக்கு உடலில் மருக்கள் தோன்றி தங்கள் அழகையே பாதிப்பதாக கருதுகின்றனர். சில சமயங்களில் மருக்கள் அரிப்பு கூட ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இதனால், மருக்களை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற நினைக்கின்றனர் பலர். ஆனால், வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டே மருவை நீக்கலாம்.
மருக்கள் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்றால் ஏற்படுகின்றன. மருக்கள் பொதுவாக வலியற்றவை. இருந்தாலும் அதை நாம் ஒரு சருமப் பிரச்னையாகவே பார்க்கிறோம். தங்களுக்கு மருக்கள் இருப்பது நூறில் 90 சதவீதம் பேருக்கு பிடிப்பதில்லை. இது பொதுவாக கை, கால், அக்குள், கழுத்து, முதுகு மற்றும் முகம் ஆகிய இடங்களில் தான் அதிகமாக உண்டாகிறது. இப்போது காஸ்மெட்டிக் துறைகளில் ஆசிட் பேஸ்டு சீரம்கள் மிகவும் பிரபலம். அவற்றில் சாலிசிலிக் அமிலம் கொண்ட சீரம் இந்த மருக்களைப் போக்குவதற்கு உதவி செய்யும்.
இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு ஏற்கெனவே உள்ள மருக்கள் உதிர உதவி செய்வதோடு புதிதாக உற்பத்தி ஆகாமலும் தடுக்கும். ஒரு காட்டனில் இந்த சீரமை தொட்டு மருக்கள் உள்ள இடங்களில் வைக்கலாம். அதேசமயம் அவரவர் சருமத்திற்கு ஏற்ப டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆப்பிள் சிடர் வினிகர் உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல, மருக்களைப் போக்கவும் மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். இதிலுள்ள அமிலத்தன்மை மருக்களில் படும்போது அது மருக்களைச் சுருங்கச் செய்யும். இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு காட்டனில் நனைத்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இதை இரவில் செய்வது நல்லது. இரவு முழுக்க வைத்து விட்டு காலையில் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
மருவை இயற்கையாகவே உதிரச் செய்வதற்கு காலங்காலமாக பயன்படுத்தும் ஒரு வீட்டு வைத்தியம்தான் இந்த பூண்டு சாறு. பூண்டு நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. மருக்களை நீக்குவதில் மிகச்சிறப்பாக வேலை செய்யக்கூடியது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் கலவையில் இருக்கும் ஆன்டி வைரல் பண்புகள் உள்ளன. இதனால், பூண்டை துருவி அதன் சாற்றை அல்லது விழுதை தினமும் மருக்கள் மீது தடவி வர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும்போது மருக்கள் இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும்.பல்வேறு சருமப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் மிக முக்கியமான வீட்டு வைத்தியமாகப் பார்க்கப்படுகிறது.
கற்றாழை ஜெல்லில் குளிர்ச்சியான பண்புகள் இருக்கின்றன. அதோடு இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மருக்களை நீக்க உதவி செய்யும்.சிலருக்கு மருக்கள் தானாக உதிர்ந்தால் கூட அல்லது அந்த இடத்தில் ஏதேனும் வீக்கம் இருந்தாலும் அந்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் வீக்கம் குறைவதோடு மருக்களும் உதிரும்.
மேலே சொன்ன வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தும் முன்பு சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.அதாவது, வீட்டு வைத்தியத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதங்களில் வேலை செய்யும். பயன்களின் அளவும் வேறாகவும் இருக்கும். எனவே, அவரவர் சருமத்திற்கு ஏற்ற வழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
அதை தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும். அதேபோல சென்சிடிவ் ஸ்கின் உள்ளவராக இருந்தால் பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.சிலருக்கு மிக மெல்லிய மருக்கள் இருக்கும்போது காலப்போக்கில் அது தானாகவே உதிர்ந்து விடும். சிலருக்கு உதிராது.வீட்டு வைத்தியங்களைத் தவிர, மருத்துவ ரீதியாகவும் மருக்களை அகற்ற நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன.மருத்துவ ரீதியாக மருக்களை அகற்ற வேண்டும் என்றால் முதலில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்கள் சரும மருவின் தன்மையைப் பொருத்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.
