×

பீட்ரூட்டின் லவ் ரூட்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

‘‘ஆணும், பெண்ணும் ஒரே பீட்ரூட்டை பகிர்ந்து உண்ண நேரிட்டால், அவர்கள் இருவரும் நிச்சயம் காதல் வயப்படுவார்கள்” என்கிற பழங்கால நம்பிக்கை ஒன்று உண்டு! ‘‘அடடா..!! இது தெரியாம, இந்த வேலன்டைன்ஸ் டேக்கு, ரெட் ரோஸ் பொக்கேவுக்கு அவ்வளவு விலை கொடுத்தேனே” எனப் புலம்பும் உங்களுக்காக… இந்த வாரம் இயற்கை 360°யில், ‘‘பீட்ரூட்டின் லவ் ரூட்!” தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் சிவப்பு! உட்கொண்டால் உடலுக்குள்ளும் பரவும் சிவப்பென, ஈர்க்கும் நிறம் கொண்ட பீட்ரூட்டின் தாவரப்பெயர் Beta vulgaris. தோன்றிய இடம் மத்தியத் தரைக்கடல் பகுதி.

செங்கிழங்கு, சுக்கந்தர், பலான்-ஷக், பீட் என பலவாறு அழைக்கப்படும் இந்தக் கிழங்கு வெளிநாடுகளில், Sugar beet, Spinach beet, Garden beet, Chard, Blood turnip, Maangelwurzel போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பீட்ரூட் என்பதே இதன் பொதுப்பெயராய் எல்லா இடங்களிலும் உள்ளது. வேரிலிருந்து கிடைக்கும் கிழங்கு வகையான பீட்ரூட் நமக்கு உணவானதே விபத்து என்கிறது வரலாறு. தன்னிச்சையாக கடலோரங்களில் வளர்ந்த Wild beet அல்லது Sea beet காட்டுச் செங்கிழங்கின் இலைகளை, ஐரோப்பா, ஆசிய பகுதிகளில் உணவாகவும், கால்நடை உணவாகவும், மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

கணவாய் (Squid) போன்ற தோற்றத்தில் இருப்பதால் பீட்ரூட் இலைகளை, ‘Teutlion’ என அழைத்த கிரேக்கர்கள், காய்ச்சல் முதல் காமம் பெருக்குதல் வரை பயன்படுத்தியுள்ளனர். கிரேக்க கடவுள் அப்பல்லோவுக்கும் பெண் கடவுள் அஃப்ரோடைட்ஸுக்கும் படைக்கப்படும் இயற்கை உணவாய் பீட்ருட் இருந்துள்ளது. ஒரே பீட்ரூட்டை பகிரும் ஆணும், பெண்ணும் காதல் வயப்படுவார்கள் என்ற நம்பிக்கை வந்ததும் இதிலிருந்துதானாம்!

வேர்ப்பகுதியான இதன் கிழங்கை உணவாக முதலில் பயன்படுத்தியது ரோமானியர்களே. குறைந்த கலோரிகளுடன் இருந்த கரடுமுரடான மஞ்சள் நிற காட்டுக் கிழங்கை ரோமில் உணவாக உட்கொள்ளத் தொடங்கிய இதன் சரித்திரம், 15ம் நூற்றாண்டின் முடிவில் கூடுதல் கலோரிகளுடன், ஆழ்ந்த சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பொன்னிறம் என பல்வேறு நிறங்களிலும், உருண்டை அல்லது சற்று நீண்ட வடிவத்திலும், ஐரோப்பாவெங்கும் வலம் வந்த பின்னரே, திரை கடலோடி பின்னர், அமெரிக்கா, கிழக்கு ஆசியா என பயணித்து, தற்போது அனைவருக்கும் பிடித்த சிவப்பு நிற பீட்ரூட்டாய் உலகெங்கிலும் திகழ்கிறது.

ஒவ் வொரு 100 கிராம் கிழங்கிலும் 44 கலோரிகளைக் கொண்ட பீட்ரூட்டில், அதிக நீர்த்தன்மை, அதிக நார்ச்சத்து, உடனடி கலோரியினைத் தரும் beet sugar எனும் பிரத்யேக சர்க்கரை, தேவையான புரதச் சத்துகளும் உள்ளது. மேலும், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்ஃபரஸ், சோடியம், பொட்டாசியம், அயோடின், செலீனியம், குளோரைட், நைட்ரேட் உள்ளிட்ட கனிமச் சேர்மங்களும், விட்டமின் C, A, B1, B2, B6, K மற்றும் லைக்கோபீன், கரோட்டினாய்டுகள், ட்ரை-டெர்பீன்கள், ஃப்ளாவனாயிடுகள் உள்ளிட்ட தாவரச்சத்துக்களும் உள்ளது.

பீட்ரூட்டின் அடர் சிவப்பு நிறத்திற்கு காரணமான பீட்டா-சயனின் (Betacyanin) மற்றும் பொன்னிறத்திற்குக் காரணமான பீட்டா-ஸாந்தின் (Betaxanthin) தாவர-நிறமிகள், பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள் பலவற்றுக்கு சேர்ந்து காரணமாகின்றன. பீட்ரூட்டை உண்டதும் சிவப்பாய் வெளியேறும் சிறுநீரும், மலமும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.

உடனடி சக்தி, ரத்த விருத்தி, கழிவுகளை வெளியேற்றும் பண்பு, செரிமான மண்டல பாதுகாப்பு, வயோதிகத்தைத் தவிர்க்கும் ஆற்றல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடன், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பு, எலும்பு, தசைகளுக்கு வலிமை, கண் மற்றும் சரும நோய்களிலிருந்து பாதுகாப்பு என பீட்ரூட்டின் பலன்கள் எண்ணிலடங்கா.

நைட்ரேட் அதிகமுள்ள, ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் குணம் கொண்ட பீட்ரூட், இதய நோய், பக்கவாதம், அல்சைமர், பார்க்கின்சன் நோய் என பலவற்றுக்கும் பயன் அளிப்பதுடன், கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கிறது. இதன் பீட்டானின்(Betanin) தாவரச்சத்து, ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை, நோயெதிர்ப்பு ஆற்றல், கதிரியக்க பாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலப் பாதுகாப்பு என, அனைத்தும் சேர்த்து உலகின் தலைசிறந்த பத்து காய்கறிகளுக்குள் ஒன்றாய் இடம்பிடித்துள்ளது.

ஜியோஸ்மின்(Geosmin) என்கிற தாவரச்சத்து, பீட்ரூட்டின் பிரத்யேக மண்மணத்திற்கு காரணமாய் விளங்குவதுடன், பலருக்கும் பிடிக்காத ஒரு காய்கறியாகவும் மாற்றுகிறது. இதில் அதிகமாக உள்ள ஃபைடிக் அமிலம், சிறுநீரக கற்கள், கௌட் நோய், வயிற்று உப்புசம், ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். விதைகளிலிருந்து பயிரிடப்படும் பீட்ரூட், மிதமான தட்பவெப்ப சூழலில், மலைப் பிரதேசங்களில் வளர்கிறது. 80 முதல் 90 நாட்களில் விளைச்சலுக்கு வரும் இது, இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

பீட்ரூட்டின் கிழங்கு, இலை, வேர், தண்டு என அனைத்து பாகங்களுமே உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவை. பச்சையாகவும், சமைத்தும் உட்கொள்ளப்படும் பீட்ரூட், ஸ்மூத்தி, சூப், சால்சா, ரிசட்டோ, ஊறுகாய் என பல்வேறு வடிவங்களில் கிடைத்தாலும், பீட்ரூட் ஜூஸ்தான் எல்லோருக்கும் பிரபலம். காரணம், உடனடி சக்தி மற்றும் உற்சாகத்தை அளிப்பதால், விளையாட்டு வீரர்களின் தேர்வாகவும் இது உள்ளது.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கழித்தே பீட்ரூட் கிழங்கு பிரபலமாகி உள்ளது. 1750ல் ஐரோப்பாவில் நிகழ்ந்த போரில், இங்கிலாந்து, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கரும்பை அனுப்ப மறுக்கவே, சர்க்கரை தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, சர்க்கரை உற்பத்தியிலும் இன்று பீட்ரூட்டின் பங்கு முப்பது சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, இன்னுமோர் அழகிய பயன்பாடும் இதில் உண்டு. அதாவது, கிரேக்கர்கள் துவக்கத்தில், தலைவலி மற்றும் பல்வலிக்கு பீட்ரூட் கிழங்கை மருந்தாய் பயன்படுத்தியதைப் போலவே, நியூசிலாந்தில் இளம்வேரை மூலிகையாக உட்கொண்டுள்ளனர்.பீட்ரூட் பற்றி இவ்வளவு அரிய தகவல்களை அறியும்போது, ஒரே பீட்ரூட்டை பகிரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் தோன்றாவிட்டாலும், பீட்ரூட் மீது காதல் பிறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

(இயற்கைப் பயணம் நீளும்…)

Tags : Valentine's Day ,
× RELATED பாட்டி வைத்தியம்!