×

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்பி விசாரணை: காரைக்குடியில் பரபரப்பு

 

காரைக்குடி: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் எஸ்பி, நேரில் விசாரணை நடத்தினார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம். இவரது அலுவலகம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள பெரியவீட்டில் அமைந்துள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். அலுவலகம் முன்பு தரையில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து பாட்டில்கள் வெடித்து சிதறின. இதில், அலுவலகத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இன்று காலை வழக்கம்போல் அலுவலகம் வந்த ஊழியர்கள், பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பாட்டில்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட போலீஸ் எஸ்பி சிவபிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி நேரில் ஆய்வு செய்தார். கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ள வீட்டில், அவரது தந்தையும் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரமும் தனது அலுவலகம் போல பயன்படுத்தி வருகிறார். அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்கள் சில நாட்களில் இரவில் தங்குவது உண்டு. ஆனால், நேற்று இரவு யாரும் தங்கவில்லை என கூறப்படுகிறது. காவலாளிகளும் இல்லை. புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Sivaganga ,Karthi Chidambaram ,SP ,Karaikudi ,Karthi ,Chidambaram ,Congress ,Karaikudi… ,
× RELATED கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி...