திருமயம், மார்ச் 11: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழிபிறையில் ரூ.7.97 கோடியில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி முயற்சியால் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய துணை மின் நிலைய கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று குழிபிறை பகுதியில் நடைபெற்றது. விழாவில் 33 கி.வா சக்தியுடைய புதிய துணை மின்நிலையம் ரூ.7.97 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி பேசியதாவது: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமயம் தொகுதியில் ஒரே ஆண்டில் கடியாபட்டி, வேந்தன்பட்டி, குழிபிறை ஆகிய 3 இடங்களில் துணை மின்நிலையங்கள் தந்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
