காரிமங்கலம், மார்ச் 11: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், குண்டலஅள்ளி பகுதியைச் சேர்ந்த சமுத்ரா என்பவர் தீபாவளி சீட்டு சேர்ந்துள்ளார். சீட்டு முடிவடைந்து இனிப்பு, பட்டாசு கொடுத்த நிலையில், பரிசு பொருள் வழங்குவதாக அறிவித்தும் தரவில்லை. இதுதொடர்பாக சமுத்ரா மற்றும் அவரது சகோதரர் சீனிவாசன் ஆகியோர் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று சீனிவாசன் மற்றும் சமுத்ரா ஆகியோர் சென்று வேடியப்பனிடம் பரிசு பொருள் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், வேடியப்பன் மற்றும் அவரது தாய் சின்னபாப்பா ஆகியோர், சீனிவாசனை தாக்கியுள்ளன. இதில், காயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், வேடியப்பன் மற்றும் அவரது தாய் சின்னபாப்பா ஆகியோர் மீது காரிமங்கலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், சின்னபாப்பா கொடுத்த புகாரின்பேரில், சீனிவாசன் மற்றும் சமுத்திரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
