கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ அளித்த பேட்டி: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாக பயணித்து கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக 2, 3 பொதுத்தேர்தலை சந்தித்து உறுதியோடு கூட்டணியில் இருக்கின்றோம்.
எனவே, எங்கள் கொள்கை உறுதிக்கான உரிய இடங்கள் கூட்டணியில் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விசிகவை தனிமைப்படுத்தலாம், அவதூறுகளை சொல்லி எங்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முன்னெடுத்த பாமக கிட்டத்தட்ட 2009 முதல் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒருங்கிணைந்த பாமகவே வெற்றிபெறவில்லை. பிளவுபட்ட பாமக எப்படி வெற்றிபெறும்.
விசிக ஜாதிக்கான கட்சி என்ற முத்திரையையும் மக்கள் உடைத்தெறிந்து இருக்கிறார்கள். 6 தொகுதியில் போட்டியிட்ட எங்களுக்கு 2 பொதுத் தொகுதியில் வெற்றிபெற வைத்து விசிக பொதுக்கட்சி என்பதை மக்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இணைந்து அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம். விசிக கொள்கைக்கான கட்சி. தேர்தல் அரசியல் என்பது எங்களுக்கு 2ம் பட்சம். பாஜவை எதிர்த்து ஏன் விஜய் ஒரு வார்த்தைகூட பேசாமல் உள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், ஜனநாயகன் திரைப்பட பிரச்னை என அனைத்திலும் அமைதி காக்கும் விஜய், பாஜவை எதிர்த்து நிற்பார் என எந்த நம்பிக்கையில் அவர் பக்கம் நாங்கள் நிற்பது?. விஜய் ஒரு நம்பிக்கைக்குரிய ஆள் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.
