பாமக உடைந்து ராமதாஸ், அன்புமணி தனித்தனி ரூட்டில் பயணம் செய்து வருகின்றனர். தேஜ அணியில் அங்கம் வகிக்கும் அன்புமணி, ராஜ்ய சபா சீட் கேட்டு பெற்றுவிட்டு, அடுத்தகட்டமாக தங்களுக்கான தொகுதிகளை பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதேவேளையில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கூட்டணி தொடர்பாக அறிவிக்காமல் இழுபறியாக இழுத்து வருகிறார். கடந்த டிசம்பரில் இருந்தே கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்… என கூறிவரும் ராமதாஸ், 3 மாதங்களாகியும் இவ்விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாமகவுக்கு உரிமை கோரும் வழக்கு நேற்று முன்தினம் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில் நிறுவனருக்கு வயதாகி விட்டதை சுட்டிக்காட்டி தலைவரான அன்புமணிக்குதான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் இருப்பதாக அன்புமணி தரப்பு வாதித்து உள்ளது. இவ்வழக்கு தள்ளி வைக்கப்பட்டதால் ராமதாஸ் கடும் விரக்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுஒருபுறமிருக்க கூட்டணி தொடர்பான அறிவிப்பை ராமதாஸ் தொடர்ந்து இழுத்தடித்து வந்த நிலையில், தைலாபுரம் வருவதை அக்கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி தவிர்த்து வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவர் தைலாபுரம் வராத நிலையில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் மற்றும் பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரும் வருகையை முற்றிலும் தவிர்த்து விட்டனர். இதேபோல் கட்சியின் தலைமை நிர்வாக குழுவில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளும் தைலாபுரம் வருவதை ஏற்கனவே தவிர்த்து விட்டனர். 8ம்தேதி மகளிர் தினவிழா அங்கு கொண்டாடப்பட்ட நிலையில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, ராமதாஸ் இருவர் மட்டுமே பங்கேற்றனர். மற்ற முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்து விட்டதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் தைலாபுரம் தோட்டத்தில் வறட்சி வாசம் வீசுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுடன் கூட்டணிக்கு ஜி.கே.மணி விருப்பம் தெரிவித்துவந்த நிலையில் அது தோல்வியில் முடிந்த விரக்தியால் அவர் அப்செட்டில் இருக்கலாம் எனவும், கூட்டணி தொடர்பான கேள்விகளை தொடர்ந்து தன்னிடம் கேட்பதால், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருப்பதால் அதை தவிர்க்கும் வகையில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருளும் தைலாபுரம் வருகையை தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* செல்பி எடுப்பாங்க… ஷேக்கன் கொடுப்பாங்க… நடிகைக்கு ஓட்டுப்போட மாட்டாங்க: விந்தியா ஓபன் டாக்
விழுப்புரம் மாவட்டத்தில் நடிகைகள் கவுதமி, விந்தியா உள்ளிட்டவர்கள் தொகுதி வாரியாக அதிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகின்றனர். அதன்படி சி.வி சண்முகம் போட்டியிடவுள்ள மயிலம் தொகுதி அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற நடிகை விந்தியா பேசியதாவது: எல்லா பெண்களுக்கும் ஒரு ரோல் மாடல் இருப்பார்கள். முதலில் அவர்கள் வீட்டில் இருக்கும் அம்மா, எனக்கு ஜெயலலிதா அம்மா. நான் சினிமாவில் இருக்கும்போது அரசியலே தெரியாத போது இந்த உலகத்தில் எத்தனை தீமையான விஷயங்கள் இருக்கும் என்று புரிஞ்சுக்க முடியாத வயதில் எனக்கு அம்மா ரோல் மாடலானார். 2006 தேர்தலுக்கு பிரசாரம் பண்றதற்கு அம்மா கூப்பிடுகிறார்கள்.
எனக்கு பிரசாரம் செய்யவும் தெரியாது, பேசவும் வராது. அரசியலும் சுத்தமா தெரியாது. ஆனால் போனேன். அம்மாகூட ஒரு போட்டோ எடுத்துக்கலாம், இந்த சான்ஸ் மறுபடியும் வராதுன்னு போய் பார்த்தேன். அம்மாவை சந்தித்த பிறகு நம்பளால முடிஞ்சத செய்யனும்னு ஒரு முடிவுக்கு வந்தேன். நடிகையா போனா, திமிரா போனா, மேக்கப்போட்டுட்டு போனா.. கூட செல்பி எடுப்பாங்க, ஷேக்கன் கொடுப்பாங்க, சிரிச்சி பேசுவாங்க. ஆனா ஓட்டுபோட மாட்டாங்கன்னு போக போக தான் தெரிஞ்சுது. அப்புறம் மேக்கப்பை கலைச்சிட்டேன். நடிகையாக இருக்கும் போது உள்ள சந்தோஷத்தைவிட அதிமுகவுக்கு வேலை பார்க்கும்போது எனக்கு நிறைய சந்தோஷம் கிடைச்சுது. இவ்வாறு அவர் கூறினார்.
