சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கான விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: சட்டமன்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை பிளஸ் 2வில் 397 ஆகவும், பத்தாம் வகுப்பில் 1,364 ஆகவும் உயர்ந்து இருந்தது.

இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம். மொத்தம் 1,761 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது வரலாற்று சாதனையாகும். இது பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல்லாகும் என பள்ளிக் கல்வித்துறை பாராட்டியது. அதன்படி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், உயர் அலுவலர்களை அழைத்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதல் முறையாக சீர்மிகு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதேபோல் 2025ம் ஆண்டில் நடத்தப்பட்ட விழாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,811 தலைமை ஆசிரியர்கள், 135 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதுதவிர விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

* துட்டு வாங்கிக்கோங்க, நல்லவங்களுக்கு ஓட்டு போடுங்க! ‘பம்பரம்’ சுற்றும் துரைவைகோ
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ எம்பி பொதுமக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து துரை வைகோ பேசினார். பின்னர் துரை வைகோ பேசுகையில், எனது தந்தை வைகோவிற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த தலைவர் நல்லகண்ணு. பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி தனது வாழ்க்கையை பொதுவுடமைக்காக அவர் அர்ப்பணித்தார். அவரையும் தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்தனர். காரணம் பணம் பெற்றுக் கொண்டு மக்கள் வாக்களிப்பதால் நல்லக்கண்ணு போன்ற நல்லவர்கள் தோற்றுப் போனார்கள். எந்த அரசியல் கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுங்கள். வேட்பாளர்கள் நல்லவர்கள் என்றால் அவர்களுக்கு பணம் பெறாமலேயே ஓட்டுப் போடுங்கள்’ என்றார்.

Related Stories: