பாகிஸ்தானில் தீவிர சிக்கன நடவடிக்கை அமல்: அமைச்சர்கள், எம்பிக்களின் சம்பளம் 50% பிடித்தம்

இஸ்லாமாபாத்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 119 டாலர் வரை உயர்ந்தது.

தங்களது எரிசக்தி தேவையில் 99 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பாகிஸ்தானுக்கு, இது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அங்கு எரிபொருள் விலை ஒரே நாளில் லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புதிய சிக்கன நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, கல்வி நிறுவனங்களுக்கு வரும் 16ம் தேதியிலிருந்து இரண்டு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய மற்றும் மாகாண அளவிலான அரசு வாகனங்களில் 60 சதவீத வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகளைத் தவிர மற்ற அரசு வாகனங்களுக்கான எரிபொருள் படி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். வங்கிகளைத் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க, அமைச்சர்கள் தங்களது இரண்டு மாத சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25 முதல் 50 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட உள்ளது. 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் உயர் அதிகாரிகள் தங்களது இரண்டு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வரும் ஜூன் வரை புதிய வாகனங்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் அரசு சார்பில் இப்தார் விருந்துகள் மற்றும் அதிகாரப்பூர்வ இரவு விருந்துகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ‘எங்களிடம் இன்னும் நான்கு வாரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு மட்டுமே உள்ளது. சர்வதேச போர் பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டை பாதுகாக்க இத்தகைய கடுமையான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories: