புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி இரவு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். நாட்டை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தியது. என்ஐஏ விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உமர்-உல்-நபி என்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து, இந்த வழக்கில் 4 மருத்துவர்கள், ஒரு மத போதகர் உள்பட 8 பேரை என்ஐஏ கைது செய்தது. மேலும் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது தெரிய வந்தது. அத்துடன், அந்த பல்கலைக்கழகம் நிதி மோசடியில் ஈடுபட்டதும், போலி அங்கீகாரம் பெற்று பெற்று செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி டெல்லி மற்றும் அல் பலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனைக்கு பிறகு, பல்கலைக்கழக தலைவர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்கலைக்கழக செயல்பாடுகளில் நடந்த பணமோசடி உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான மற்றொரு வழக்கில் ஜாவத் அகமது சித்திக்கை கடந்த பிப்ரவரி 5ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், பணமோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாவத் அகமது சித்திக்குக்கு 2 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
