இந்தியர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை ஈரான் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்

 

புதுடெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். ஈரான் நாட்டின் அணு உலைகள் மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. தொடர்ந்து இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகள் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி பதிலடி கொடுத்தது. இந்த போர் மூள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்ததையும், தாக்குதல் குறித்து ஒன்றிய அரசு முதலில் அமைதி காத்ததையும் சுட்டிக்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தாமாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்கே ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. நாடு திரும்ப விரும்புபவர்களுக்காக விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலர்களை தாண்டி உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலையும் விநியோகச் சங்கிலியில் கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஈரானின் கடற்படை கப்பலான லவன் கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும். அமைதியை விரும்பும் இந்தியா, இந்த பிரச்னை தீர பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் என்ற பாதைக்கு திரும்புவதே ஒரே தீர்வாகும்’ என்று தெரிவித்தார்.

 

Related Stories: