புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வெளியுறவு கொள்கை குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவணே எழுதிய புத்தகத்தின் சில பகுதிகள் வெளியிடப்படாத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், கடந்த கூட்டத்தொடரின் போது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து போராடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. கடந்த பிப். 28ம் தேதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானியத் தலைவர் கொல்லப்பட்டதற்கு ஒன்றிய அரசு மவுனம் காப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
தற்போதைய நிலையில், நடுக்கடலில் சிக்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்க கருவூலத் துறை அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் இந்த தற்காலிக அனுமதியானது, கடந்த 5ம் தேதிக்கு முன்பாக ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன்வைக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று மீண்டும் தொடங்கியது. இதையொட்டி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பேச அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டி 118 எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 11ம் தேதி வரை எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. இதற்கிடையே, மேற்கு ஆசியப் பகுதி போர்க்களமாக மாறியுள்ள சூழலில், அங்கு வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், கடல் வழித்தடத்தில் சிக்கியுள்ள 38 இந்தியக் கப்பல்களை மீட்பது குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார். மறுபுறம், இந்த மாத தொடக்கத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் கோஷங்கள் எழுப்பின. அதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடந்தது.
அதேநேரம் மாநிலங்களவையில் மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்ய முயன்றார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் ஈரானின் ஐரிஸ் தேனா கப்பல் இந்திய பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டபோது, பிராந்திய பாதுகாப்பு வழங்கும் நாடாக இந்தியா ஏன் மவுனம் காத்தது என எதிர்க்கட்சித் தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது விளக்கத்தில், ‘மேற்கு ஆசிய விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது. மனிதாபிமான அடிப்படையில் ஈரானின் ஐரிஸ் லவன் கப்பல் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மை நோக்கம்’ என தெரிவித்தார். இருப்பினும், வெறும் அறிக்கையாக மட்டும் தராமல் இது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
