‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் ஆலோசனை கேட்டு கோயில் கழிவறையில் 2 மாணவிகள் தற்கொலை: குஜராத்தில் நடந்த விபரீதம்

சூரத்: குஜராத் மாநிலத்தில் கல்லூரிக்கு சென்ற இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் டிண்டோலி பகுதியில் உள்ள ஆத்மியா சன்ஸ்கர்தாம் சுவாமி நாராயண் கோயில் கழிவறையில் இரண்டு இளம் பெண்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘உயிரிழந்த இரு மாணவிகளும் உத்னா சிட்டிசன் கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களில் ரோஷ்னி சிர்சாத் (18), ஜோத்ஸ்னா சவுத்ரி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி உள்ளனர். மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தேடத் தொடங்கினர். அவர்களது செல்போன் இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அது கோயில் வளாகத்தை காட்டியது. அங்கு சென்றபோது அவர்களின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. கோயில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரும் பொது கழிவறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் தரையில் மயங்கிக் கிடந்தனர்.

சம்பவ இடத்தில் ஊசிகள் மற்றும் மூன்று விஷத்தன்மை கொண்ட மயக்க மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் திட்டமிட்ட தற்கொலை என தெரியவந்துள்ளது. மாணவிகள் இருவரும் கடந்த சில நாட்களாக கூகுள் மற்றும் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் ‘வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி?’ மற்றும் ‘தற்கொலைக்கு எளிதான வழிகள் என்ன?’ என்பது குறித்து தேடியுள்ளனர். இணையதளத்தில் கிடைத்த தகவல்களை வைத்தே மருந்துகளை வாங்கி தற்கொலை செய்துள்ளனர். மாணவிகள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது குறித்து கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

Related Stories: