5 மணிக்கு மேல் சரக்கு கட்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் இறங்கி விட்டன. ராஜ்யசபா தேர்தல் முடிந்தபின் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. அதற்கான பிரசார வாகனங்களையும் தயார்படுத்தி வருகின்றன.

வழக்கமாக தேர்தல் காலம் என்றாலே பணம், சரக்கு, பரிசுபொருட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதில் அந்தந்த மாநில தேர்தல் துறையால் அமைக்கப்படும் பறக்கும் படைகள் முழுவீச்சில் கண்காணிப்புகளை மேற்கொள்ளும். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பொருட்களை பறிமுதல் செய்து, முழுமையான விசாரணைக்கு பிறகே அவற்றை விடுவிக்கும். கடத்தல் உறுதிசெய்யப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையிடம் பரிந்துரைக்கும்.

இந்த சூழலில், தமிழகத்தை ஒட்டியுள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தேர்தல் கால முன்னெச்சரிக்கை பணிகளில் அரசுத் துறைகள் முழுவீச்சில் இறங்கி விட்டன. குறிப்பாக கலால்துறை தனது தேர்தல் ஆயத்த பணிகளை இப்போதே தீவிரப்படுத்தி விட்டது. இதன் ஒருபகுதியாக மதுபான மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லரை உரிமம் பெற்ற விற்பனையாளர்களை அலுவலகத்துக்கு அழைத்த துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், அவர்களுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதாவது, சிசிடிவி கண்காணிப்பு வசதிகளுடன் வணிக நேரத்தை முறையாக கடைபிடித்து விற்பனை விபரங்களை இணையத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். கலால்துறை துணை ஆணையரால் வழங்கப்படும் பர்மிட்டுடன் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல வேண்டும், இதற்கான வாகனங்களில் கண்டிப்பாக ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதி இருத்தல் வேண்டும்,

இந்த சரக்குகளின் இருப்பை கிடங்குகளில் அதிகாரிகள் (ஹாலோகிராம் ஸ்டிக்கர்) சரிபார்த்த பின்புதான் விற்பனை செய்யப்பட வேண்டும், தேர்தல் காலங்களில் மதுபான கிடங்கில் இருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்ல மாலை 5 மணிக்குமேல் அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட கண்டிஷன்கள் நினைவூட்டல் செய்யப்பட்டது.

குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சரக்கு விற்கக்கூடாது, அறிவிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது என தெரிவித்த துணை ஆணையர், இந்த விதிகளை மீறுவோரின் உரிமம் தடாலடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே தேர்தல் முன்னேற்பாடாக தமிழகம் (கடலூர், விழுப்புரம்), புதுச்சேரி கலெக்டர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் முதல்கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: