இது எங்க ஏரியா பாஸ்… ஓரமா விளையாடுங்க…!

அதிமுக-பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடே இன்னும் இறுதியாகாத நிலையில் பாஜ சில தொகுதிகளில், தாங்கள்தான் நிற்கிறோம் என பேசி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் பலர் வரிசை கட்டி வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக இவர்களில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், தனக்குத்தான் சீட் என தொகுதியை சுற்றுவது மட்டுமின்றி சென்னைக்கும், சேலத்திற்கும் தொடர் விசிட் அடித்து வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜ தரப்பில் சாத்தூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை பாஜவினர் தரப்பில் ஏற்பாடு செய்து நடத்தியதால் அதிமுகவினர் சற்றே கலக்கமடைந்துள்ளனர். சரி… கூட்டம் தானே நடத்துகின்றனர். நடத்திவிட்டு போகட்டும். நாம தானே போட்டியிடப் போறோம். பிறகு பார்த்துக் கொள்வோம் என்றிருந்துள்ளனர். பாஜ பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் பேசும்போது, ‘‘தாமரை சொந்தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

சாத்தூர் தொகுதியில் இந்த முறை உறுதியாக பாஜ வேட்பாளர் தான் போட்டியிடுவார். அந்த வேட்பாளரால் சாத்தூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெறும் தொகுதியாகவே இருக்கும். இதனால், இப்போதே தேர்தல் பணியை துவக்குங்கள். இன்று முதல் இனிமேல் சாத்தூர் நமது தொகுதி என்ற நிலை வர வேண்டும்’’ என ரொம்பவே சூடு பறக்க பேசியுள்ளார். இதனால் சீட் கேட்டு காத்திருக்கும் அதிமுக மாஜி எம்எல்ஏ ராஜவர்மன், கிழக்கு மவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: