வேலூர்: எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர்களை முழுமையாக நிறுத்தினால் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்பட முடியாமல் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 5.03.2026 அன்று வெளியிட்ட உத்தரவின் படி, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் பிரிவு 3 மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் ஆணை 1999ன் கீழ், எண்ணெய் நிறுவனங்கள் அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை எல்.பி. ஜி. சிலிண்டர்களை வீட்டு பயன்பாட்டிற்கே மட்டும் வழங்க வேண்டும். வர்த்தக பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் இந்த முடிவு ஓட்டல் மற்றும் உணவகத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் முழுமையாக வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி செயல்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர்களின் வழங்கலை முழுமையாக நிறுத்தினால், பல ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்பட முடியாமல் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் பொதுமக்களுக்கும், இந்தத் துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, அரசு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதற்கும், ஓட்டல் மற்றும் உணவகத் துறைக்கு எல்.பி.ஜி. சிலிண்டர்களின் தடையற்ற வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
