நச்னு நாலு கேள்வி: பாஜ ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

1. பெண் அமைச்சராக இருக்கும் நீங்கள், ஆண் அமைச்சர்கள் பலர் நிறைந்திருக்கும் அமைச்சரவையில், எவ்வாறு பிரகாசிக்க முடிகிறது? திராவிட மாடல் அரசு முதல்வர் சொல்வது போல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சமூகநீதி கொள்கையை அடிப்படையாக கொண்டு தான் நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆண் அமைச்சர், பெண் அமைச்சர் என்ற எந்த பாகுபாடும் நம்முடைய முதல்வர் ஆட்சியில் கிடையாது. பெரியார் அனைவரையும் தோழர் என்று தான் கூப்பிடுவார். அதைப்போன்று அண்ணா தம்பி என்றும், கலைஞர் உடன்பிறப்பே என்றும், தலைவர் உயிருக்கு உயிரான கலைஞரின் உடன் பிறப்பே என்று கூப்பிடுவார்கள். அப்படி கூப்பிடும் போது சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆண், பெண் என்ற வித்தியாசம் என்பதே இல்லை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்ய வேண்டும்.

2. மகளிர் நலனுக்கு தற்போதைய திமுக ஆட்சியில் செய்துள்ள என்னென்ன திட்டங்கள், இந்த முறை எந்த அளவுக்கு தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும்? இது மகளிருக்கான அரசு என்று முதல்வர் கூறியது போல் மகளிருடைய பொருளாதாரம், கல்வி வளர்ச்சி உயரக் கூடிய வகையில் பல திட்டங்களை தான் திராவிட மாடல் அரசின் முதல்வர் செய்து கொண்டு இருக்கிறார். மகளிர் உயர்ந்தால் தான் மாநிலம் உயரும் என்று கடந்த மகளிர் தினத்தன்று கூட முதல்வர் கூறினார். அதனால் இந்த ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

விடியல் பயணம் மூலம் அதிக பெண்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனர். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாதம் ஆயிரம் என்பது சாதாரண ஏழை மகளிருக்கு பெரிய உதவியாக இருக்கிறது. மாதம் 15ம் தேதி வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்கிறது. அந்த பணத்தை அவர்கள் எடுத்து செலவு பண்ணும் போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி மிகப் பெரிய விஷயம் தான்.

தேர்தலை காரணம் காட்டி 3 மாதம் பணத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள் என்று முதல்வர் யாரும் எதிர்பார்க்காத வகையில் வங்கி கணக்கில் ரூ.5000 செலுத்திய பிறகு தான் ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து கொடுத்ததுள்ளேன் என்று கூறினார். மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

புதுமைப் பெண் திட்டம் பெண்கள் கல்வி மூலம் தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர முடியும் என்று ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படுவது மூலம் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள முடியும். பெண்கள் தான் அதிக திட்டங்களுக்கு பயனாளிகளாக இருப்பார்கள், 14வயது உடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசியை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் செயல்படுத்தப்படுகிறது.

அரசு பணிகளில் வேலை செய்யும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் தமிழ்நாட்டில் தான் வழங்கப்படுகிறது. பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலில் பெண்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார்கள், நம்முடைய முதல்வர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார்கள்.

3. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் விளக்கம் என்ன? இந்தியா முழுவதும் 42 சதவீதம் பெண்கள் பணிபுரியும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி வேலைக்கு செல்ல முடியும். பாஜவினர் டபுள் என்ஜின் மாநிலம் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி போன்ற வடமாநிலங்களில் தான் அதிகளவில் குற்றங்கள் நடைபெறுகிறது. மணிப்பூரில் இன்னும் பிரச்னைகள் தீராமல் உள்ளது. இதுபோன்று குற்றங்கள் வடமாநிலங்களில் தான் அதிகளவில் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த புகார் மீது விரைவில் தண்டனை வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகள், பிம்பங்கள் கண்டிப்பாக உடைத்து எறியப்படும்.

4. மாணவிகள் உள்ளிட்ட மகளிர் கூட்டத்தை ஈர்க்கின்ற சக்தியில், தன்னை எம்ஜிஆர் போலவே விஜய் கருதுகிறார் என சொல்லப்படும் கருத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து எம்ஜிஆர் இருந்த இடத்தை விஜய் மட்டுமல்ல வேறு யாரும் பிடிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் கொள்கை தெளிவுள்ள மக்கள் தான், படித்த மாநிலம் தான், விவரமானவர்கள் இருக்கிறார்கள்.

நிறைய பிரச்னைகளுக்கு அவர் எந்த மாதிரியாக நடந்து கொள்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். நம்முடைய முதல்வரை பெண்கள் அனைவரும் அண்ணனாக, தகப்பனாக, குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர். அவருக்கு ரசிகர்கள் இருக்கலாம், ஓட்டாக மாறாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் முதல்வருக்கு தான் இளைஞர்கள் முழு சப்போட்டாக இருப்பார்கள். மேலும் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள்.

Related Stories: