திருவனந்தபுரம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். நேற்று இடுக்கி மாவட்டம் குட்டிக்கானத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது: கேரளா ஸ்டோரி 2 படம் வெளியான தியேட்டர்களில் ஆள் இல்லாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்தப் படத்தை யாரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
கேரளாவின் உண்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை இந்தப் படத்தில் காட்டவில்லை என்பது நம் நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இது இன்னும் புரியவில்லை. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும், திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி நம் நாட்டைச் சேர்ந்த சில பிரிவினரை மட்டும் அந்நியப்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் செலவிடுகின்றனர். இத்தகைய செயல் நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
