புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் பாஜவும் இடம் பெற்றுள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு புதிய அமைச்சராக பதவியேற்ற ஜான்குமார், இலாகா இல்லாமலே தொடர்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இலாகா இல்லா அமைச்சராகவே விடைபெற்று வரலாற்றில் இடம் பிடித்து விடுவார் என எதிர்க்கட்சிகள் கலாய்த்து வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரியில் பாஜவுடன் கூட்டணியை ரங்கசாமி உறுதிசெய்து விட்ட நிலையில் அதிமுக, லஜகவுக்கு சீட்டுகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. தனக்கான தொகுதி 16ஐ எடுத்துக் கொண்ட என்ஆர் காங்கிரஸ், மீதி உள்ள தொகுதிகளை மற்ற கட்சிகள் பங்கிட்டு கொள்ளுமாறு கூறிவிட்டது. இதுஒருபுறமிக்க நாங்க கூட்டணியில் இல்லைன்னா… ரங்கசாமி முதல்வர் சீட்ல அமர முடியாது… என அதிமுகவும் மிரட்டல் விடுத்து வருவது தேஜ அணியில் புகைச்சலை மேலும் அதிகப்படுத்தி வருகிறது.
2011ல் நாங்கள் ரங்கசாமியுடன் இருந்தோம், முதல்வராக பதவி ஏற்றார். 2016ல் நாங்கள் இல்லை, முதல்வராக அவரால் அமர முடியல. மீண்டும் 2021ல் நாங்கள் ஆதரித்தோம், முதல்வர் இருக்கையில் ரங்கசாமி இருக்கிறார். நாங்கள் தோற்கிறோம், ஜெயிக்கிறோம் என்பது பிரச்னையல்ல, ரங்கசாமி முதல்வர் சீட்ல அமரணும் என்றால் எங்க ஆதரவு ரங்கசாமிக்கு தேவை.
இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்று அரியணை ஏற முடியாது என சவால் விடுக்கும் வகையில் அக்கட்சியின் மாநில செயலாளரான அன்பழகன், எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களுக்கான சீட்டை நீங்களே ஒதுக்கித் தர வேண்டும் என அதிமுக பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தாலும் இதுவரை என்ஆர் காங்கிரஸ் தரப்பில் எந்த பதில் ரியாக்ஷனும் இல்லாமல் இருப்பது கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
