×

மார்க்சிஸ்ட் கட்சியில் 55 பேருக்கு மீண்டும் வாய்ப்பு

கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 41 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 81 பேர் போட்டியிட்டனர். இதில் 62 பேர் வெற்றி பெற்றனர்.

இவர்களில் 55 பேருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் கே.என். உண்ணிகிருஷ்ணன் ஆகிய 2 பேரின் தொகுதிகள் மட்டும் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கே.கே.ஷைலஜா கடந்த முறை மட்டனூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவர் தான் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவருக்கு இம்முறை பேராவூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் வைப்பின் தொகுதியில் போட்டியிட்ட கே.என். உண்ணிகிருஷ்ணனுக்கு இம்முறை திருப்பூணித்துறா தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த முறை போட்டியிட்ட அதே 81 தொகுதிகளில் தான் இம்முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இதில் 70க்கு மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதற்கு மாநிலக் கமிட்டி அங்கீகாரம் அளித்துவிட்டது. மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சில வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நிலை நீடிக்கிறது. பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் யார் என்பது தெரிந்த பின்னர் ஒரு பொது வேட்பாளரை களம் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags : Marxist ,Kerala ,Marxist Communist ,Left Alliance ,Congress ,United Democratic Front ,
× RELATED நேபாளத்தின் பிரதமராகும் ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா!