புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு சாதனங்கள் செயல்படுவதை தடுப்பதற்காக எம்பிக்கள் தங்களது வாகனங்களை 10.கி.மீ. வேகத்தில் இயக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகின்றது. இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையானது புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி எம்பிக்களின் வாகனங்கள் நாடாளுமன்ற வளாகத்தின் இரும்பு நுழைவு வாயில்களில் உள்ள கடைசி சாதனத்தை கடக்கும் வரை வாகனத்தின் வேகத்தை மணிக்கு 10 கி.மீ. மிகாமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக செயல்படும் வகையில் பாதுகாப்பு சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் வேகம் 10கி.மீயை தாண்டினால் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவது கடினமாக இருக்கலாம். சாலையில் இருக்கும் தடுப்பான்கள் மீதான தாக்கம் வாகனத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். பூம் தடையை (Boom barrier)கடக்கும்போது இரண்டு வாகனங்களுக்கு இடையே குறைந்தது 5 அடி தூரம் பராமரிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு ஒரே நேரத்தில் ஒரு வாகனத்தை மட்டுமே அனுமதிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
