புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு பதவியில் இருந்து வருகிறது. கடந்த 2011 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வரும் மம்தா பானர்ஜியை தோற்கடித்து, மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று அக்கட்சியினர் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. இதில், 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 6 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிபட்டியல் கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே எஸ்ஐஆர் பணிக்கு எதிராக மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி 60 லட்சம் பேரின் பெயர்கள் கொண்ட தனிபட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த 60 லட்சம் பேரில் தகுதியான வாக்காளர்களை கண்டறிய நீதிபதிகளை கொண்ட ஆய்வுக்கு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. நீதிபதிகள் தங்கள் ஆய்வுப்பணியை தொடங்கி உள்ள நிலையில், இதைபயன்படுத்தி மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜவும் தேர்தல் ஆணையமும் சதி செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,‘‘ மேற்கு வங்கத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எஸ்ஐஆரின் கீழ் தங்கள் விசாரணைகளை முடிக்க காத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் உண்மையிலேயே இறுதியானது அல்ல. 60 லட்சம் பேரிடம் நடத்தப்படும் விசாரணைகளுக்குப் பிறகு, துணை வாக்காளர் பட்டியல்களை” வெளியிட தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த துணை வாக்காளர் பட்டியல்களை வெளியிடுவதற்கான தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த துணை வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கு வங்கத்தில் தேர்தல்களை அறிவிக்க முடியும். தற்போதைய மேற்கு வங்காள சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
வழக்கமாக, தேதிகள் அறிவிப்புக்கும் வாக்களிப்புக்கும் இடையில் 3 வார கால இடைவெளி இருக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை 8 கட்டங்களாக நடத்தியது, இதற்கு 34 நாட்கள் ஆனது. அதன் அடிப்படையில், இந்த முறை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் வாக்குப்பதிவு தொடங்க வேண்டும். எனவே, இந்த அட்டவணையின்படி, வங்காளத்திற்கான தேர்தல் தேதிகளை மார்ச் 16 ஆம் தேதிக்கு முன் அறிவிக்க வேண்டும்.
மார்ச் 6 ஆம் தேதி ஆகிவிட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் ஒரு துணைப் பட்டியலை வெளியிடவில்லை அல்லது இந்தப் பட்டியல்களை வெளியிடுவதற்கான தேதியையும் குறிப்பிடவில்லை. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் மே 7 ஆம் தேதிக்கு முன் முடிக்கப்படாவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்யும் நிலையை உருவாக்க தேர்தல் ஆணையம் முயல்கிறது என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது கீழ்க்காணும் கேள்விகளை எழுப்புகிறது.
* மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்காக மோடி-ஷாவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் வங்காளத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதை தாமதப்படுத்துகிறதா?
* இதனால்தான் மேற்கு வங்காளத்திற்கு ஒரு புதிய ஆளுநர்(ஆர்.என்.ரவி) திடீரென நியமிக்கப்பட்டாரா?
பாஜ மேற்கு வங்கத்தில் சொந்தமாக வெற்றி பெற முடியாததால், குறுக்கு வழியில் வெற்றி பெற தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஒரு கொடூரமான மற்றும் ஆபத்தான சதி இது. இவ்வாறு அந்த பதிவில் சகேத் கோகலே எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி ஆட்சியின்போது ஆர்.என். ரவி ஆளுநராக இருந்தால் பாஜ வெற்றிக்கு உதவும் என்ற நோக்கில்தான் அவரை தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்கத்திற்கு மாற்றி உள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
* தர்ணா போராட்டம் துவங்கினார் முதல்வர் மம்தா
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் தன்னிச்சையாக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மத்திய கொல்கத்தாவில் உள்ள எஸ்பிளனேட் மெட்ரோ சேனலில் இந்த போராட்டம் நடைபெற்றது.
