அமெரிக்கா-ஈரான் போரினால் பற்றாக்குறை அபாயம் சமையல் காஸ் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு: எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை

புதுடெல்லி: அமெரிக்க- ஈரான் போர் எதிரொலியால் சமையல் எரிபொருளின் பற்றாக்குறையை தடுக்க ஒன்றிய அரசு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024-25ம் ஆண்டில் 3 கோடியே 13 லட்சம் டன் சமையல் எரிவாயுவை(எல்பிஜி) இந்தியா பயன்படுத்தி உள்ளது. அதில் 1 கோடியே 28 லட்சம் டன் எரிவாயு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. மீதம் உள்ளவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி உலகளவில் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால், சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், அனைத்து பொது மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் புரோபேன் மற்றும் பியூட்டேன் எரிவாயுவை எல்பிஜி உற்பத்திக்கு அதிகபட்சமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்காக புரோபேன்,பியூட்டேன் வாயுவை பயன்படுத்துவதை தடை செய்து அவசர கால அதிகாரங்களை(எஸ்மா) பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும், நாட்டில் உள்ள வீடுகளுக்கு போதுமான எல்பிஜி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: