முண்டாலி: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முண்டாலியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின்(சிஐஎஸ்எஃப்) 57வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி உள்ளனர்.
பெரிய சவால்கள் இருந்தபோதும், பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு பணியையும் ஒழுக்கத்துடனும், உறுதியுடனும் மேற்கொண்டு வருகின்றனர். நீர்த்தேக்கங்கள் முதல் நாடாளுமன்றம் வரை முக்கிய இடங்களுக்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாக பயன்படுகிறது.
அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். தொழில்துறை அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் துணையாக உள்ளனர். இந்தியா இந்த மாத இறுதிக்குள் நக்சல் இல்லாத நாடாக மாறும்” என உறுதியுடன் கூறினார்.
