- சனி
- கும்பம்
- மீனம்
- சனி பெயர்ச்சி விழா
- திருநள்ளாறு கோயில்
- காரைக்கால்
- சனி பெயர்ச்சி
- சனி பகவான்
- ஷானி பெயர்ச்சி…
காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. சனிப்பெயர்ச்சி என்பது நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் ஒரு ராசியிலியிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வாகும். இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். அதன்படி இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா இன்று (மார்ச் 6) நடந்தது. சனி பகவான் இன்று காலை 8.24 மணி அளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சாமி கோயிலில் சனீஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த மாதம் 11ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 22ம் தேதி தருமை ஆதீனம் மற்றும் புதுவை அரசு சார்பில் நலன் குளத்தில் கங்கா ஆரத்தி வைபவம் நடந்தது. மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஆன்மீக ஜோதிடர் மாநாடு நடந்தது.
நேற்றிரவு சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வீதிஉலா வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சனி பெயர்ச்சியையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் சனி பகவானுக்கு மஞ்சள் பொடி, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி திருநள்ளாறு கட்டளை மடத்தில் தருமை ஆதீன குருமணிகளை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் இனிப்பு பாயாசம் வழங்கி சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரவேற்றார்.
பின்னர் மிக சரியாக காலை 8.24 மணி அளவில் சனிபகவானுக்கு வைர அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர், கலிதீர்த்த விநாயகர் கோயிலில் வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்து மூலவர் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி, அம்பாள் பிராணாம்பிகை, அதனை தொடர்ந்து அனுக்கிரக மூர்த்தியான சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்.காரைக்கால் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடந்தது. அதிகாலை முதல் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 8.24 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசனம் செய்தனர்.தஞ்சை பெரியகோயிலில் உள்ள சனீஸ்வரனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
