×

ரூட்டை மாற்றிய கேடிஆர்

எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது ஜெயலலிதாவை ஆதரித்து அவரது அணியில் திருத்தங்கல் நகரச் செயலாளராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதிரடியான தனது பேச்சின் மூலம் எப்போதும் லைம்லைட்டில் இருந்து கொண்டே இருப்பார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எப்போதும் ராசியை நம்பும் அவரை செய்தித்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து 2016ல் நடந்த தேர்தலிலும் அதே சிவகாசியில் போட்டியிட்டு இரண்டாம் முறையாக எம்எல்ஏ ஆனார்.

அப்போதும் அவருக்கு அமைச்சரவையில் பங்கு கிடைத்தது. பால்வளத்துறை அமைச்சரானார். அப்போது ஆவினில் பணி நியமனங்களில் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு அவர் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 2021ல் நடந்த தேர்தலில் மீண்டும் சிவகாசியில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது, தொகுதி மாற வேண்டுமென யாரோ ஒரு ஜோதிடர் ஆரூடம் சொல்ல, அவரும் சிவகாசியை கைவிட்டுவிடலாம் என்ற முடிவுக்கு சென்றுவிட்டார்.

சிவகாசி இல்லாவிட்டால் வேறு எந்த தொகுதியில் போட்டியிடுவது என ராஜேந்திரபாலாஜி அந்த ஜோதிடரிடம் கேட்க, அரசியலில் ராஜாவாக வேண்டுமென்றால் ‘ராஜா’ என துவங்கும் தொகுதிகளை தேடலாம் என கூறியுள்ளார். இதை நம்பி அவரும் சிவகாசியில் இருந்து அருகே உள்ள ராஜபாளையம் தொகுதிக்கு ஷிப்ட் ஆனார். ராஜபாளையத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனிடம் தோல்வி அடைந்தார். இதனால், அவரது ஹாட்ரிக் வெற்றிக்கு தடை போடப்பட்டது.

இதையடுத்து அவரது ஆதரவாளர்களும், அவரின் நலன் விரும்பிகளும், அண்ணே பேசாம நீங்க சிவகாசியிலேயே நின்றிருக்கலாம், அங்க எப்படியாவது நீங்க ஜெயிச்சுருப்பீங்க, யாரோ ஜோசியர் சொன்னாருன்னு நீங்க தொகுதி மாறியிருக்க வேண்டியதில்லை, உங்கள் மீதும், கட்சியினர் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை வைக்காமல் நீங்கள் தொகுதி மாறியது தவறு, தொடர்ச்சியாக சிவகாசியில் போட்டியிட்டிருந்தால் மூன்றாம் முறையாக நீங்கள் எம்எல்ஏ ஆகியிருப்பீர்கள் என கூறியுள்ளனர்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ராஜேந்திரபாலாஜி, மீண்டும் சிவகாசிதான் தனக்கு சாதகமாக இருக்கும் என ஜோசியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் உறுதி செய்துள்ளார். தற்ேபாது ரூட்டை மீண்டும் சிவகாசியின் பக்கம் திருப்பிவிட்டார். கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் தொடர்ந்து சந்தித்து பேசி தேர்தல் களப்பணிக்கு தயார் செய்து வருகிறார். இவர் கட்சியினருக்கு தாராளமாகவே செலவிடுவார் என்பதால், ‘நம்ம காட்டில் மழைதான்’ என சிவகாசி தொகுதி அதிமுகவினர் ரொம்பவே குஷியில் உள்ளனர்.

Tags : KTR ,AIADMK ,MGR ,K.T. Rajendrabalaji ,Jayalalithaa ,Tiruthangal ,Sivakasi… ,
× RELATED வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60...