சொன்னாரு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டார். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார்.
செஞ்சாரு: கடந்த 2022ம் ஆண்டு செப். 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்தத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தனர். அதன்படி 2022ம் ஆண்டு 26 தகைசால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட்டன.
தகைசால் பள்ளிகள்: ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக கூடலூர், கோவை, பழநி, குளித்தலை, திருச்சி, கடலூர், நாகை, பட்டுக்கோட்டை, திருப்புவனம், மதுரை தெற்கு, கோவில்பட்டி, நெல்லை, அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தவகை பள்ளிகள் மூலம் 62,460 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 2025-26ம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ. 160.82 கோடியில் தமிழ்நாடு முழுவதும் 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
மாதிரி பள்ளிகள்: 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து என்டிஎஸ்இ என்ற தேசிய திறனறிவுத்தேர்வு, என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்குரிய தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்பட்டன.
