×

இது வெரி வெரி ராங் ப்ரோ… ஒரு டாப் ஸ்டாரும்… டூப் ஸ்டாரும்…!

ஆந்திர திரையுலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 90களில் டாப் ஸ்டாராக இருந்த இவர், அமிதாப்பச்சனை ஓவர் டேக் செய்து, அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்தவர். இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். இவருக்கும் அரசியல் ஆசை விடவில்லை. 2008, ஆக. 26ம் தேதி திருப்பதியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரஜா ராஜ்ஜியம் என்ற தனது கட்சிப்பெயரை அறிவித்தார்.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அக்கூட்டத்தில் திரண்டிருந்ததால், ‘ஆந்திராவின் அடுத்த முதல்வர்’ என கருதப்பட்டார். ஆந்திர சினிமா உலகில் சூப்பர்ஸ்டாராக பேசப்பட்ட என்.டி.ராமராவ், கட்சி தொடங்கிய 9 மாதங்களில் ஆட்சியை கைப்பற்றினார். அவரது சாதனையை கட்சி துவங்கிய 8 மாதங்களில் செய்து சிரஞ்சீவி முறியடிப்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். கட்சி துவங்கியதும் குண்டூரில் இருந்து தெனாலி நோக்கி பிரசாரத்தை துவக்கினார். வழியெங்கும் அவரை பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள், ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது சக்ராயபாலம் என்ற கிராமத்தில் இருந்து 2 வாலிபர்கள், அவரை பார்க்க வேகமாக பைக்கில் வந்தபோது, எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் இறந்தனர். தகவலறிந்த சிரஞ்சீவி, பிரசாரத்தை நிறுத்தி, விபத்து நடந்த இடத்திற்கு சென்றதோடு, அவர்களின் குடும்பத்திற்கும் நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். அப்போது இருவரின் பெற்றோர், ‘உங்களுக்கு கட்டாயம் வாக்களிக்கும் 2 உயிர்கள் இறந்து விட்டன’ என கூறியுள்ளனர். அது சிரஞ்சீவி மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தன்னை ரசிகர்கள் பின்தொடர்ந்து வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இதையெல்லாம் படிக்கும்போது ஒரு நடிகரின் கட்சி சார்பில் கரூர், விக்கிரவாண்டி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கூட்டங்கள், மாநாடுகள் கண் முன் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. அதன்பிறகு 2009ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில், பிரஜா ராஜ்ஜியம் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் போட்டியிட்டவர், திருப்பதியில் வென்றார். பாலகொல்லுவில் படுதோல்வி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியை காங்கிரசுடன் இணைத்தவர், ஒன்றிய இணையமைச்சர் ஆனார். பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டு பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது கட்சியின் பின்னடைவுக்கு சில காரணங்கள் கூறப்பட்டன. வலுவான நிர்வாகிகளை நியமிக்காதது,

சரியான கொள்கையின்றி கட்சி துவங்கியது, களப்பணியில் தொண்டர்களை ஊக்கப்படுத்தாதது, அரசியல் அறிவு, திறன் கொண்டவர்களை அருகில் வைத்துக் கொள்ளாதது, கார்ப்பரேட் ஸ்டைல் அரசியல், மேடைகளில் மட்டும் வீர முழக்கம், மாநில நலனுக்கான சிறந்த திட்டங்கள் இல்லாதது, திரை பலம் மட்டுமே கைகொடுக்கும் என ரசிகர்களை மட்டுமே நம்பி இறங்கியது அவருக்கு தேர்தலில் படுதோல்வியை தந்தது…!

ஒய் ப்ரோ… இப்ப சிரஞ்சீவி அரசியல் கதை எதுக்கு ப்ரோ… அப்படின்னு யோசிக்கிறீங்களா…? 90களில் ரஜினி, கமல் போல பான் இந்தியா ஸ்டாராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி. ஆனால், வலுவில்லாத கொள்கைகள், தெளிவற்ற திட்டங்களால் தோல்வி முகத்துடன், ‘அரசியலே வேண்டாம்டா சாமி’ என தெறிச்சு ஓடினார். அதனால டாப் ஸ்டார் என்ற ஒன்றை மட்டுமே வச்சு ஜெயிக்கனும்னு நினைக்கிறது… ‘ஸாரி ப்ரோ… இது வெரி வெரி ராங் ப்ரோ..’.

Tags : Chiranjeevi ,Andhra ,Amitabh Bachchan ,
× RELATED தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு