புதுடெல்லி: அசாமில் இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமானது. விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. அசாமில் உள்ள ஹோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் நேற்று மாலை புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், ‘இரவு 7.42 மணிக்கு கடைசியாக விமானம் தொடர்பில் இருந்தது. விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் ரங்க்லோன் கிராமப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு மலைப்பகுதியில் உயரமான மலை உச்சியில் பெரும் சத்தம் கேட்டதாகவும், பெரிய அளவில் தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறி உள்ளனர். அது உயரமான மலை என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் சென்றடைவது சிரமமானது. விமானத்தில் இருந்த விமானியின் கதியும் தெரியவில்லை.
