×

மாநிலங்களவை எம்பி பதவிக்கு அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் மனுத்தாக்கல்: பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்

பாட்னா: பீகாரில் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த முதல்வர் நிதிஷ்குமார் நேற்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார். பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு)-பாஜ கூட்டணி மொத்தம் உள்ள மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.

இந்த கூட்டணியில் அங்கம் வகித்த பாஜ 89, ஜேடியு 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்தியா கூட்டணி தரப்பில் ஆர்ஜேடி 25 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றது. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதன்மூலம் தொடர்ந்து 10வது முறை பீகாரின் முதல்வராக நிதீஷ் குமார் பொறுப்பேற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 5 இடங்களில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 4 இடங்களை எளிதில் பிடிக்கும் சூழ்நிலை உள்ளது. இதில் 2 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜ அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலில், முதல்வர் நிதிஷ் போட்டியிட உள்ளதாகவும் இதனால் விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று நேற்று முன்தினம் தகவல்கள் வந்தன. ஆனால் அது வதந்தி ஹோலி தினத்தன்று மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்பட்ட அரசியல் வதந்தி என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மறுத்திருந்தார்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் மாநிலங்களவையில் நுழைய விரும்புவதாகவும் நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார். இது குறித்து முதல்வர் நிதிஷ்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள்(மக்கள்) எனக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதனால் பீகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக நேர்மையாக சேவை செய்து வருகிறோம்.

உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே பீகார் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பீகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக, வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்தில் தொடரும் என்றும் பீகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும். இவ்வாறு நிதிஷ் குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சட்ட பேரவை தேர்தலில் தேஜ கூட்டணிக்கு அமோக வெற்றியை தேடி தந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து பாஜவை சேர்ந்த தலைவர் ஒருவர் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது. முதல்வர் நிதிஷின் திடீர் அறிவிப்பை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று வலியுறுத்தி முதல்வரின் இல்லத்துக்கு வெளியே ஜேடியு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* முதல்வர் பதவிக்கு கடும் போட்டி
நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் பதவிக்கு பாஜ தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி முன்னணியில் உள்ளார். இவர் பிற்பட்ட கோரி வகுப்பை சேர்ந்தவர். அதற்கு அடுத்ததாக ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளார். இவர் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு அமித் ஷாவின் ஆதரவு உள்ளது. பாஜ வட்டாரங்கள் கூறுகையில்,மபி, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களை போல் மிகவும் பிரபலமில்லாத ஒரு தலைவரை முதல்வர் ஆக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றன.

* முதல்முறையாக பீகாரில் ஆட்சி
வட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜ கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வர்கள் ஆகி விட்டனர். பீகாரில் முதல் முறையாக இப்போது தான் பாஜவுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்துள்ளது.

* நிதிஷ் மகன் துணை முதல்வர்
நிதிஷ் குமார் ராஜினாமாவுக்கு பின் அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு(40) துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. என்ஜினியரிங் பட்டதாரியான நிஷாந்த் குமார் இதுவரை அரசியலுக்கு வராமல் ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மக்களுக்கு துரோகம்: தேஜஸ்வி யாதவ்
பீகார் முதல்வரின் இந்த முடிவை ஆர்ஜேடி செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘பீகார் முதல்வர் நிதிஷின் இந்த முடிவு மக்களின் தீர்ப்புக்கு எதிரான துரோகம் ஆகும். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது பாஜ கட்சி.நிதிஷ் குமார் தனது பதவியை பாஜவுக்கு விட்டு கொடுத்துள்ளதால் சோசலிஸ்ட் கட்சிகள் வலுவாக உள்ள பீகாரில் தங்களுடைய சித்தாந்தங்களை பாஜ செயல்படுத்த முயற்சிக்கும். மகாராஷ்டிராவை போல் பீகாரிலும் இப்போது பாஜ தனது வேலையை செய்துள்ளது. நிதிஷ்குமாரை பாஜ கடத்தி விட்டது’ என்றார்.

Tags : Nitish Kumar ,Amitsha ,Bihar ,chief minister ,Patna ,Assembly ,Bihar Assembly ,United Janata Dalam ,JDU ,
× RELATED பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து...