1972ல் திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தோற்றுவித்தார். இதன்பின்னர் தமிழ்நாட்டின் அரசியல்களம் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளை மையப்படுத்தியே இன்றுவரை சுழன்று கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு கூட கட்சிக்குள் எழுந்த கோஷ்டிமோதல்களை சமாளித்து ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றி, கால் நூற்றாண்டு காலம் வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் நிலைமை மிகப் பரிதாபகரமாக மாறியுள்ளது.
அந்தக் கட்சியின் தற்போதைய நிலைமை கண்டு, உண்மை தொண்டர்கள், நிர்வாகிகள் தங்களது கடுமையான அதிருப்தியையும் மன வேதனையையும் வெளியே சொல்ல முடியாமல் இருக்கின்றனர். தேசிய கட்சியான பாஜ, மாநிலங்களில் ஏதேனும் ஒரு பிரதான கட்சியின் தோளில் ஏறி சவாரி செய்து, பிறகு அந்த கட்சியையே உரமாக்கிவிட்டு, செழிப்பாக வளர்ந்து நிற்பது வழக்கம். எண்ணற்ற உதாரணங்கள் நாடு முழுக்க உண்டு. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாஜவிற்கு வசமாக சிக்கியது அதிமுக.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு செல்வாக்குமிக்க தலைமை இல்லாத சவலை பிள்ளையாகிப்போன அதிமுகவின், இரண்டாம்கட்ட தலைவர்களின் ‘முக்கிய பைல்கள்’ ஒன்றிய பாஜ அரசின் வசம் சிக்கியதாக கூறப்பட்டது. இதனால் பாஜ ஆட்டுவிக்கும் தலையாட்டி பொம்மையாக அதிமுக தலைவர்கள் மாறிப்போயினர். தமிழ்நாட்டு மண்ணுக்கு முற்றிலும் ஒத்துப்போகாத சித்தாந்தம் கொண்ட பாஜவுடன் அதிமுக சேர்ந்து கொண்டதால், அடிமட்ட தொண்டர்களிடையே அதன் செல்வாக்கு செல்லாக்காசாகி வருகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த அத்தனை தேர்தல்களிலும் அதிமுக மண்ணை கவ்வியதே இதற்கு சாட்சி. இதுபோக அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி, சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும், தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாகவும் தென்மாவட்ட அதிமுகவினர் இடையே குமுறல் உள்ளது. இதனால் கடந்த சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுக பலத்த அடி வாங்கியது.
‘எனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் இருக்கும்’ என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் அவர் மறைந்து 10 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் கட்சி பாதாளத்தை நோக்கி புல்லட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கட்சியிலும் புறக்கணிப்பு, தேர்தலிலும் தொடர் தோல்வி என விரக்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். குறிப்பாக, தாய் கழகமான திமுகவில் தகுந்த மரியாதை வழங்கப்படுவதும், ஒன்றிய அரசுக்கே சவால்விட்டு சுயமரியாதையோடு செயல்படுவதும் அவர்களை திமுகவின் பக்கம் ஈர்த்து வருகிறது.
இதனால் அதிமுகவின் முக்கிய தலைவர்களான வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், அன்வர்ராஜா என வரிசையாக திமுகவில் ஐக்கியமாகி, முக்கிய பொறுப்புகளை பெற்று செயல்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழக அரசியலிலேயே இதுவரை நடந்திராத வகையில், அதிமுக சார்பில் மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அதிமுகவின் பிடி தற்போது முழுமையாக பாஜ கைகளுக்குச் சென்று விட்டது.
இனி அது மீள்வது சந்தேகம் என்ற நம்பிக்கை கட்சியின் கடைக்கோடி தொண்டர் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது. அதிமுக இருக்கும் நிலைமையை பார்த்தால் மீண்டும் திமுகவுடன் இணைத்து விட்டு செயல்படுவதுதான், மாநிலத்தின் சுயமரியாதைக்கும், மக்களுக்கும் நல்லது, இல்லையென்றால் தமிழகம் காவி கும்பல்களால் கபளீகரமாக்கப்பட்டுவிடும் என அதிமுக தொண்டர்கள் உணர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோதே, மாநில சுயாட்சி நலன்கருதி இருவரையும் இணைந்து செயல்பட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து தற்போது திமுக மாநில செய்தி தொடர்புக்குழு துணைத்தலைவராக இருப்பவரும், அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருந்ததுடன், அதிமுகவின் அதிகார நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான மருது அழகுராஜ் ஏற்கனவே அதிமுகவை தாய்க்கழகத்தில் இணைப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சூழல் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த தேசத்தையும் காங்கிரஸ் ஆளும்போது திராவிடக் கொள்கையை முன்னிலைப்படுத்திய ஒரு மாநிலக்கட்சி முதன் முதலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது தமிழ்நாட்டில்தான். 1967ல் தமிழ்நாட்டில் திமுக பெற்ற இந்த வெற்றி இந்திய தேசம் முழுக்க பயங்கரமாக எதிரொலித்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தவுடன் தமிழ்நாட்டை இந்திய தேசமே திரும்பி பார்த்தது. அந்த சூழலில்தான், 1972ல் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர் அதிமுக கட்சியை உருவாக்கினார்.
அப்போது, இந்திய அரசியலை புரட்டிப் போட்ட திராவிட இயக்கத்தில் பிரிவும், பிளவும் நல்லதல்ல என கருதிய பல்வேறு மாநிலங்களில் உள்ள சில தலைவர்கள் சிந்தித்தனர். எனவே, கலைஞரையும், எம்ஜிஆரையும் ஒன்றிணைக்க பெரும் முயற்சி எடுத்தனர். அதில் முதன்மையானவர்கள் ஒடிசாவின் பிஜூ பட்நாயக், புதுச்சேரியை சேர்ந்த பரூக் மரைக்காயர். இருவரும் நல்லெண்ண தூதுவர்களாக கலைஞரையும், எம்ஜிஆரையும் மீண்டும் ஒன்றிணைய வைத்து பிளவை சரி செய்ய களத்தில் இறங்கினர்.
இருப்பினும் அன்றைய காலகட்டத்தில் சிலர், தங்களது தனிப்பட்ட நலனுக்காக திமுகவில் அதிமுக இணைவதை விரும்பவில்லை. அவர்கள் செய்த அரசியல் சூழ்ச்சியும், சதியும் இணைப்பை தடுத்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கட்சி விரோத நடவடிக்கையாலும், அவரது எஜமானர்களான மோடி, அமித்ஷா போன்றவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் குழப்பத்தாலும், அன்று உருவான திராவிட இயக்கப்பிளவு இன்றைக்கு சரியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இரு இயக்கமும் ஒன்றுபடும் சூழலும் உருவாகியிருக்கிறது. இனி அண்ணாதிமுக என்ற கட்சி இல்லை. அறிஞர் அண்ணா தொடங்கிய திமுக என்ற கட்சி மட்டுமே இருக்கும் நிலை உருவாகும். திராவிட பூகோளத்திற்கு நல்ல காலம் உருவாகி வருகிறது. அதிமுகவை தோற்றுவித்ததில் தொடங்கி அக்கட்சிக்கு உழைத்த அன்வர்ராஜா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற மைத்ரேயன், ஜெயலலிதாவிற்கு உரையாசிரியராகவும்,
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் 20 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த நான், அதிமுகவில் நீண்ட காலம் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அதிமுகவில் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர், நிதியமைச்சர், 3 முறை முதல்வர் என பெரும் அடையாளமாக இருந்த ஓபிஎஸ் என பலர் தாய்க்கழகமான திமுகவில் இணைந்துள்ளோம். எம்ஜிஆர் அரசியல் பயின்றதும், முதன் முதலில் அதிகார பதவிகளில் அமர்ந்ததும் திமுகவில் தான்.
உதயசூரியன் சின்னத்தை தனது நெற்றியில் வரைந்து கொண்டு, தனது கதாபாத்திரங்களுக்கு உதயசூரியன் என பெயரிட்டு, கருப்பு, சிவப்பு கொடி பிடித்து முதன் முதலில் திரையில் காட்டியது எம்ஜிஆர் தான். அவர் வளர்ந்த தாய் வீட்டிற்கு அணி, அணியாக இன்று திரண்டு வர காரணமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்றால் அவருக்கு உளமார நன்றி சொல்லத்தான் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி கூட அறிவாலயம் எனும் சரணாலயத்திற்கு ஆதரவு தேடி வரலாம்.
எப்படியோ கிழக்கு, மேற்கு என உடைந்த ஜெர்மனி ஒன்றானது போல, திராவிட இயக்கமும் ஒன்றாகும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனை தவிர்த்து அதிமுகவிற்கு என்டிஏ வண்ணம் பூச, வடக்கு இந்திய கம்பெனியான பாஜ பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அது இந்த பெரியார் மண்ணில் கனவிலும் கைகூடாது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் தாயுமான தலைவரின் அரவணைப்பு அரசியல் அதிமுக தொண்டர்களிடமும், அங்கே எஞ்சியுள்ள தலைவர்களிடமும் அளவற்ற ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் தலைமை பண்பு திராவிட இயக்க அரசியல் ஒற்றுமையின் கோட்டை கட்டும் புதிய பொற்காலத்தை உருவாக்கி கொண்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் கனவும், கலைஞரின் லட்சியமும், ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று பாடிய எம்ஜிஆரின் ஒற்றுமை வேட்கையும் கைகூடி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* அன்றைய காலகட்டத்தில் சிலர், தங்களது தனிப்பட்ட நலனுக்காக திமுகவில் அதிமுக இணைவதை விரும்பவில்லை. அவர்கள் செய்த அரசியல் சூழ்ச்சியும், சதியும் இணைப்பை தடுத்தது.
* கலைஞரையும், எம்ஜிஆரையும் ஒன்றிணைக்க பெரும் முயற்சி எடுத்தனர். அதில் முதன்மையானவர்கள் ஒடிசாவின் பிஜூ பட்நாயக், புதுச்சேரியை சேர்ந்த பரூக் மரைக்காயர்.
