×

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார்

 

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா நேற்றுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த அர்விந்த் ஹெச்.தர்மாதிகாரி மற்றும் மறைந்த சுபா தர்மாதிகாரிக்கு கடந்த 1966 ஜூலை 8 அன்று பிறந்த நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1992-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2000 -2015 காலகட்டத்தில் வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றிய அவர், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு ஏப்ரலில் கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

Tags : Sushrut Arvind Dharmatikari ,Chief Justice ,Chennai High Court ,Chennai ,People's House ,Kindi, Chennai ,Governor ,Ravi ,Judge ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை...