டாஸ்மாக் பணியாளார்களின் கோரிக்கை ஏற்பு ரூ.1000 சம்பள உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் பணிபுரிபவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில், அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. அதன்படி டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000 உயர்த்தி வழங்கப்படுகிறது.

இது, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 24,033 கடை பணியாளர்கள் பயன்பெறுவார்கள். கடை பணியாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ மற்றும் சமூகப்பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அவுட்சோர்சிங் முறையிலோ அல்லது காலிபாட்டில்களை சேகரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியில் உள்ள கடை பணியாளர்களுக்கு குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணிவழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் (டாஸ்மாக்), பொது மேலாளர் (சில்லறை விநியோகம்), பொது மேலாளர் (நிர்வாகம்), துணை பொது மேலாளர் மற்றும் சட்டஅலுவலர் (டாஸ்மாக்) ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை துறைக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: