ரூ.2900 கோடி செலவில் நவீன ராணுவ ஹெலிகாப்டர் எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்: கடற்படைக்கு ரூ.2182 கோடியில் ஏவுகணைகள் கொள்முதல்

புதுடெல்லி: இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் முயற்சியாக, நவீன போர் கருவிகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவை படைகளில் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்கு தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஷிடில் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை ரூ.5,083 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(எச்ஏஎல்) நிறுவனத்துடன் ரூ.2,901 கோடியில் 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.அதே போல் ரஷ்யாவின் ஜெஎஸ்சி ரோசாபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ.2,182 கோடியில் ஷிடில் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: