வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஜித்தா, புஜைரா, மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை: இன்று தொடங்கியதாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரான் உட்பட வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து நிலைகுலைந்தது. இதன் காரணமாக ஈரான், ஈராக், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான் எல்லைகள் பாதுகாப்பு கருதி உடனடியாக மூடப்பட்டன. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் சிவில் கட்டமைப்புகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்திய தூதரகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு 10 சிறப்பு மீட்பு விமானங்களை இன்று இயக்குகிறது. இதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று புஜைராவிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு சிறப்பு மீட்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட்டிற்கான விமான சேவையை இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மற்ற வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் இன்று நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. எதிகாட் ஏர்வேஸ் நிறுவனம் நாளை மதியம் 2 மணி வரை தனது வழக்கமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. நிலைமையை கண்காணித்து வரும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ‘விமான நிறுவனங்களிடமிருந்து நேரடி உறுதிப்படுத்தல் தகவல் வராமல் பயணிகள் விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

 

Related Stories: