சவுதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் ஈரான் போர் மேலும் தீவிரமடையும்: அதிபர் டிரம்ப் மிரட்டலால் பதற்றம்; அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

துபாய்: குவைத்தை தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இப்போரை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அனைத்து அமெரிக்கர்களும் உடனடியாக வெளியேற அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

4வது நாளாக நேற்றும் இப்போர் உக்கிரமாக நடந்தது. இரவு முழுவதும் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தின. அதைத் தொடர்ந்து நேற்று காலை இஸ்ரேல், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஓமனில் ராஸ் அல் ரைமா துறைமுகத்தின் மீது ஈரான் டிரோன் தாக்கியதில் கரும்புகை வெளியேறிய வீடியோ காட்சிகள் வெளியாகின. மேலும், நேற்று முன்தினம் குவைத்தில் அமெரிக்க தூதரம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறி உள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்பை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை கண்டித்த அவர் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழிப்பது, இனி எப்போதும் அவர்களால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது, அதற்கான உள்கட்டமைப்புகளை முழுவதுமாக அழிப்பதற்காக இந்த போர் நடக்கிறது.

எங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை இப்போர் ஓயாது. இதற்காக அமெரிக்காவின் இன்னும் அதிகமான படைகளை கொண்டு வரவும் தயார். தேவைப்பட்டால் ஈரானில் தரைவழியாக தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம். இனி அமெரிக்காவின் தாக்குதல் மேலும் தீவிரமாக இருக்கும். எங்கள் பதிலடியை விரைவில் பார்ப்பீர்கள். இந்த போர் 4 அல்லது 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு சண்டையிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், குவைத், கத்தார், ஈராக் ஜோர்டான் உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து அவசரகால பணியாளர்கள் அல்லாதவர்கள் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் குடியிருப்புகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலை விட்டு வெளியேற எந்த வகையிலும் தங்களால் உதவ முடியாது என்றும் அவ்வாறு வெளியேற முயல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. இதே போல, ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் சண்டையிட்டு வரும் நிலையில் லெபனான் நாட்டில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* விமான சேவை தொடக்கம்
அரபு நாடுகளில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க விமான நிறுவனங்கள் அரசாங்க ஆதரவுடன் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை இயக்கத் தொடங்கின. அபுதாபி மற்றும் துபாயை சேர்ந்த எதிஹாட் ஏர்வேஸ், பிளைடுபாய் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவை குறைந்த அளவில் விமானங்களை இயக்கின. 3 மணி நேர இடைவெளியில் எதிஹாட் 16 விமானங்களை இஸ்லாமாபாத், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், மும்பை, மாஸ்கோ மற்றும் லண்டன் ஆகிய இடங்களுக்கு இயக்கியது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டன.

* முடிவடையாத போராக இருக்காது: நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘‘இது நிச்சயம் முடிவடையாத போராக இருக்காது. கொஞ்சம் நேரமாகாலாம். ஆனால் ஆண்டுக்கணக்கில் நடக்காது. கடந்த ஜூன் மாதம் 12 நாள் போருக்கு பிறகு ஈரான் மீண்டும் புதிய இடங்களில் புதிய தளங்களில் பதுங்கு குழிகளிலும் ஏவுகணை தயாரிப்பு மற்றும் அணு ஆயுத தயாரிப்புகளில் இறங்கியது. இப்போது அவர்களை தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாதவர்களாகி விடுவார்கள் என்பதால் இந்த யுத்தம் நடக்கிறது’’ என்றார்.

* மிகவும் தாமதமாகி விட்டது பேச்சுவார்த்தை இல்லை
அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில், ‘‘ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அனைத்தும் போய்விட்டது. அவர்கள் பேச விரும்புகிறார்கள். அது மிகவும் தாமதமாகி விட்டது’’ என கூறி உள்ளார்.

* உணவு ஏற்றுமதிக்கு ஈரான் தடை விதிப்பு
போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானில் அனைத்து உணவு மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘மறுஉத்தரவு வரும் வரை அனைத்து விதமான உணவு மற்றும் விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. ஈரான் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* பாரசீக, ஓமன் வளைகுடாவில் 37 இந்திய கப்பல்களில் 1,109 மாலுமிகள் சிக்கித்தவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் முக்கிய கப்பல் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் 1,000க்கும் மேற்பட்ட மாலுமிகளைக் கொண்ட 37 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் சிக்கியுள்ளன. சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜியை ஏற்றிச் சென்றாலும், மற்றவை வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வருவதற்காகச் செல்கின்றன.

இதனால் 37 இந்திய கப்பல்களில் உள்ள 1,109 மாலுமிகள் சிக்கித்தவித்து வருகிறார்கள். கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் கப்பல் நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியாவில் தற்போதைய மோதலில் வெளிநாட்டுக் கொடியுடன் சென்ற கப்பல்களில் இருந்த குறைந்தது மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்திய கப்பல்கள் மீது இதுவரை எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை.

* இந்தியா எண்ணெய் சப்ளை 50 சதவீதம் நிறுத்தம்
உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி கையாள்கிறது. இந்த பகுதி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 50 சதவீதம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் வருகின்றன. இப்போது தொடர் தாக்குதல் நடப்பதால் இந்தியாவுக்கான எண்ணெய் சப்ளை 50 சதவீதம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

* அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை அமைத்தது ஒன்றிய அரசு
மேற்கு ஆசிய முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒன்றிய அரசு அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை அமைத்துள்ளது. இது தினமும் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

* இந்தியாவில் ஒரே நாளில் 250 விமானம் ரத்து
மத்திய கிழக்கு மோதல் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய 4 விமான நிலையங்களில் நேற்று ஒரே நாளில் 250க்கும் மேற்பட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் போர் தொடங்கிய 4வது நாளான நேற்றும் இந்தியாவில் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. டெல்லியில் 80 விமானங்களும், மும்பையில் 107 விமானங்களும், பெங்களூருவில் 42 விமானங்களும், சென்னையில் 30 விமானங்களும் நேற்று ரத்தாகி இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* ஈரானில் 3 நாளில் 787 பேர் பலி
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல் கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் 3 நாளில் ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் ரெட் கிரசண்ட் அமைப்பு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. 153 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் நாள் தாக்குதலில் மினாப் நகரில் பெண்கள் தொடக்க பள்ளி மீது குண்டுவீசப்பட்டதில் 165 மாணவிகள் பலியாகினர். இந்த மாணவிகளின் அடையாளம் காணப்பட்ட சடலங்கள் நேற்று மினாப் நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

* இங்கிலாந்து எதிர்ப்பு டிரம்ப் கொந்தளிப்பு
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடுமையாக எதிர்த்து உள்ளார். அவர் கூறுகையில்,’ டிரம்ப் நடவடிக்கை மிகவும் உதவிகரமாக இல்லை’ என்றார். இதற்கு பதில் அளித்த டிரம்ப்,’ இங்கிலாந்து-அமெரிக்க சிறப்பு உறவு முன்பு இருந்தது போல் இல்லை. நான் மிகவும் வருத்தமாக உள்ளேன். ஈரானை தாக்க அமெரிக்கப் படைகள் பிரிட்டிஷ் விமான தளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க ஸ்டார்மர் மிக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். அவர் (ஸ்டார்மர்) உதவியாக இல்லை. நான் அதைப் பார்ப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இங்கிலாந்திலிருந்து அதைப் பார்ப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் இங்கிலாந்தை நேசிக்கிறோம்’ என்றார்.

* வளைகுடா நாட்டு தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுடன் புடின் தொலைபேசியில் பேசினார்.

* இந்தியாவுக்கு எரிவாயு சப்ளையை குறைத்தது கத்தார்
ஈரான் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய சப்ளையரான கத்தார், விநியோகங்களை குறைத்துள்ளது. இது இந்திய தொழில்துறைக்கு விநியோகத்தில் 40 சதவீதம் வரை குறைப்புக்கு வழிவகுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் உற்பத்தி மற்றும் உர உற்பத்தி முதல் சிஎன்ஜி விநியோகம் மற்றும் குழாய் சமையல் எரிவாயு நெட்வொர்க்குகள் வரையிலான துறைகளில் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2.70கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி செய்து வருகிறது. இதில் 40 சதவீதத்தை கத்தார் குறைத்துள்ளது.

Related Stories: