செஞ்சி, மார்ச் 4: கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து தண்ணீரில் மூழ்கி 4 பேர் பலியானார்கள். சென்னை கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் வினோத் (38). உயர்நீதிமன்ற வழக்கறிஞர். இவரும் இவரது நண்பர்கள் மவுலிவாக்கத்தை சேர்ந்த குமார் மகன் சேகர் (27), கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆதிகேசவன் மகன் ஜெயமுருகன் (42) ஆகிய 3 பேரும் காரில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றனர். காரை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த மணி மகன் ராஜா (45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இவர்கள் கிரிவலம் முடித்துவிட்டு நேற்று காலை செஞ்சி வழியாக சென்னைக்கு திரும்பினர். அப்போது இரவு கண் விழித்து பயணித்த தூக்க கலக்கத்தில் டிரைவர் காரை தாறுமாறாக ஓட்டியதால் சத்தியமங்கலம் அடுத்த ஆலம்பூண்டி அருகே இடது பக்கம் உள்ள விவசாய பயன்பாட்டுக்கான கிணற்றில் கார் பாய்ந்தது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் மூழ்கியது. உடனடியாக தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிப் பார்த்தனர்.
ஆழம் அதிகம் என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் செஞ்சி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். இருந்தும் அவர்கள் காருக்குள் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்பது மிகவும் சிரமமாக இருந்தது. பிறகு கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேனில் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர். அப்போது காரில் இடிபாடுகளில் சிக்கி மூன்று பேரின் சடலங்கள் மட்டுமே இருந்தது. இதனால் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கிணற்றிலிருந்து மேலும் ஒருவரது உடல் எடுக்கப்பட்டது. காரில் சிக்கி இருந்த வினோத், சேகர், ராஜா மற்றும் கிணற்றில் மூழ்கி இருந்த ஜெயமுருகன் ஆகிய நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாலை ஓரமே இந்த சம்பவம் நடந்ததால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியதால் திருவண்ணாமலை செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இறந்துபோன நான்கு பேரில் வினோத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சேகர் தேசிய கபடி வீரர், காரை ஓட்டி வந்த ராஜா தனியார் கம்பெனி ஆட்டோ டிரைவர், ஜெயமுருகன் ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிரிவலம் சென்று திரும்பியவர்களின் கார் கிணற்றில் மூழ்கி நான்கு பேர் இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கிரிவலம் சென்றவர்கள் அங்கு சென்றபின் வழக்கறிஞர் வினோத் தனது நான்கு பேரையும் செல்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சேகரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணமானவர்கள்.
